நாட்டைவிட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா..வன்முறையாக மாறிய போராட்டம்

By John A

Published:

இந்தியாவிலிருந்து முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் பிரிந்தபோது கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. தற்போது பங்களாதேஷ் என அழைக்கபடும் கிழக்கு பாகிஸ்தான் பகுதிக்கும் மேற்கு பாகிஸ்தான் பகுதிக்கும் இடையே சுமார் 1600 கி.மீ தொலைவு. மேலும் அனைத்து போக்குவரத்தும் இந்தியாவினூடே செல்ல வேண்டும் என்பதால் 1971-ல் பல போராட்டங்களுக்குப் பிறகு தனிநாடாக மலர்ந்தது.

அருகில் மேற்கு வங்காளம் இருப்பதால் வங்காள மொழியே பங்களாதேஷ் நாட்டிலும் பேசப்படுகிறது. தலைநகரமாக டாக்கா உள்ளது. பங்களாதேஷ் நாடு 1991-க்குப் பிறகு மக்களாட்சி மலர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா இருக்கிறார்.

இந்நிலையில் வங்காளதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 30சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?

இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் காவல் துறையினர் கட்டுக்குள் கொண்டுவர தடியடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. போலீசார் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடத்திய தாக்குதலில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பிரதமர் அலுவலகத்தையும் சூறையாடினர். நாட்டிற்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யக் கோரியும் அழைப்பு விடுத்தனர். மேலும் காவல் துறை தரப்பிலும் சிலர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் மீண்டும் தன்னிச்சையாக தலைநகர் டாக்காவில் உள்ள சதுக்கத்தில் கூடினர். இதனால் மேலும் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. தொடர்ந்து நிலைமை மோசமாவதைக் கண்ட பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இன்று தனி ஹெலிஹாப்டரில் உத்திரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் வந்திறங்கினார். இவருடன் அவரது சகோதரியும் வந்தார். இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அவர் தஞ்சம் புகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.