தமிழ்த்திரை உலகின் பிரபல பின்னணிப் பாடகரான டிஎம்.சௌந்தரராஜன் ஒரு வெண்கலக் குரலோன். அவரது பாடல்கள் எல்லாமே காலத்தால் அழியாத காவியங்கள். அப்பேர்ப்பட்ட ஒரு லெஜண்ட் தன்னை ஆரம்ப காலத்தில் எப்படி எல்லாம் பத்திரிகையில் விளம்பரம் செய்து கொண்டார் என்று தெரியுமா? இதோ அந்த சுவாரசியமான தகவல்.
அந்த விளம்பரத்தில் தன்னை ஒரு புதிய முகம் என்றும் இளம் சங்கீத வித்வான் என்றும், நல்ல கர்நாடக சங்கீத அனுபவமும், இனிமையான சரீரமும் உள்ளவர் என குறிப்பிட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் பல நாடகத்துறையில் அனுபவம் பெற்றவர் என்றும், ‘ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ என்றும், கிராமபோன் கம்பெனியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு 29.1.1947ல் இவர் பாடும் பாடலானது திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் வருகிறது. ரசிகர்கள் இதைக் கேட்டு ரசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் என்று தெரிவித்துள்ளார். இவருடைய வயது 24, உயரம் 5 அடி, 5 அங்குலம் என்றும் பட அதிபர்கள் புதிய நட்சத்திரமான தன்னை அறிமுகப்படுத்துவர் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சேரி மற்றும் அதைச் சார்ந்த விளம்பரங்களுக்கு தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு விலாசத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மதுரை டிஎம்.சௌந்தரராஜன், 3, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, மதுரா என்று குறிப்பிடப்பட்டு அப்போதைய பத்திரிகைகளில் அவரது இளமையான உருவத்துடன் கூடிய படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்து இருந்தார்.
இது அப்போது சாதாரணமாக தெரிந்து இருந்தாலும் இப்போது பார்க்கையில் எவ்வளவு பெரிய லெஜண்ட் இப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்துள்ளாரே என வியக்க வைக்கிறது. அது சரி. அப்போது போட்ட இந்த விதை தானே அதன்பிறகு விஸ்வரூபமாக வளர்ந்துள்ளது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



