பிக் பாஸ் 8: என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல.. பெண்கள் அணியின் பிரச்சனை பற்றி ஆண்கள் அணியில் சொன்ன சாச்சனா.. கண்ணீர் விட்ட சுனிதா..

By Ajith V

Published:

Sunitha vs Sachana : பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் இளம் போட்டியாளராக களமிறங்கி இருந்த சாச்சனா, முதல் நாளிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவருமே கண்கலங்கி இருந்தனர். ஆனால் நான்கு நாட்கள் கழித்து அவர் திரும்ப வந்ததும் அனைவருமே உற்சாகம் அடைந்ததுடன் மட்டுமில்லாமல் சாச்சனா நல்ல போட்டியாளராக வரவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டனர்.

அதே நேரத்தில் சாச்சனா செய்த ஒரே ஒரு விஷயத்தால் பெண்கள் அணியில் இருந்த மூன்று பேர் அவர் மீது கோபத்தில் இருக்க இந்த விஷயம் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாட்களாக வெளியே இருந்த சாச்சனா அதுவரை பார்த்த போட்டியாளர்கள் குறித்தும் அவர்களின் கேம் குறித்தும், பல கருத்துக்களை வீட்டில் சென்று அனைவரிடமும் விளக்கி இருந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் யார் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும், யாரை பற்றி அதிகமாக மக்கள் பேசுகிறார்கள் என்பது பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட பலரும் இனிவரும் நாட்களில் தங்களின் விளையாட்டை கவனமாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் சாச்சனா வந்த போது பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் சிலர் வீக்காக இருப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார். அதே நேரத்தில் பெண்களில் யார் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது பற்றி பேசாத சாச்சனா, ஆண்கள் அணியிடம் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது சுனிதா, சௌந்தர்யா மற்றும் அன்ஸிதா ஆகிய மூன்று பேர் பலவீனமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த மூன்று பேரிடமும் இது பற்றி பேசாத சாச்சனா, அவர்களுக்கு சிறந்த அறிவுரையும் கொடுக்காமல் விட்டுவிட்டார். இதனை கவனித்து வார இறுதியில் கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, ஆண்களிடம் அதைப் பற்றி பேசிய நீங்கள் ஏன் பெண்களிடமே விளக்கவில்லை என்று கேட்டிருந்தார். சாச்சனா தன்னை பலவீனமான போட்டியாளர் என ஆண்கள் அணியினரிடம் தெரிவித்ததை அறிந்து உடனடியாக சுனிதா கண்ணீர் வடிக்கவும் தொடங்கியிருந்தார்.

மற்ற பெண்களிடம் பேசிய சுனிதா, ‘அப்படி நான் வீக்காக இருக்கிறேன் என்றால் என்னிடமே வந்து தெரிவித்திருக்கலாம். அதை ஏன் ஆண்கள் அணியில் சென்று சாச்சுனா கூற வேண்டும்’ எனக் கூறி கண்ணீர் வடிக்கிறார். அது மட்டுமில்லாமல் சாச்சனாவை நான் இளம் போட்டியாளராக ஒரு உயரத்தில் வைத்திருந்ததாகவும் இப்போது அவர் செய்த செயலால் அத்தனையும் உடைந்து போனதாகவும் வேதனையை பகிர்ந்தார் சுனிதா.

இன்னொரு பக்கம் சௌந்தர்யாவோ, ‘ஏன் நீ எங்களிடம் நேரடியாக பேசாமல் அவர்களிடம் போய் கூறினாய்?’ என கேள்வி சாச்சனாவிடம் நேரடியாக கேட்க, இதற்கு பதில் சொன்ன அவர், நானாக அவர்களிடம் பலவீனமான போட்டியாளர்களின் பட்டியலை தெரிவிக்கவில்லை என்றும் அவர்களாக பெண்கள் அணியில் யாரெல்லாம் வீக்காக இருக்கிறார்கள் என்று கேட்டதால் பதில் தெரிவித்ததாகவும் விளக்கம் கொடுத்தார்.

ஆனாலும் இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்பது சௌந்தர்யாவின் ரியாக்ஷனிலேயே தெரிந்திருந்தது.