சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தனுஷின் வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிர்வணத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்கான 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் , வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.