அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..

By John A

Published:

இந்திய சினிமா உலகில் தனது இசையால் பல கோடி இதயங்களைக் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா. இளையாராஜாவின் சினிமா பயணத்தில் அவரது முதல் பாடல் அன்னக்கிளி படம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக ஆவதற்கு முன்னால் பழம்பெரும் இசையமைப்பாளார் ஜி.கே. வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

அங்கு பணியாற்றிக் கொண்டே ஓய்வு நேரங்களில் ஏராளமான டியூன்களைப் போட்டு வைத்திருந்தாராம் இளையராஜா. ஒருமுறை ஜி.கே. வெங்கடேஷ் ஸ்டுடியோவில் 1973-ல் சிவக்குமார்-ஜெயச்சித்ரா நடிப்பில் வெளியான பொன்னுக்குத் தங்க மனசு என்ற படத்தின் இசைக் கோர்ப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்படத்தின் இயக்குநர்கள் தேவராஜ் – மோகன் ஆகிய இருவரும் ஜி.கே. வெங்கடேஷிடம் ஒவ்வொரு டியூனாக ஒகே செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வெங்கடேஷ் போட்ட டியூன் அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லை.

வெங்கடேஷ் நிறைய டியூன்களைக் கொடுத்தும் அவர்கள் திருப்தி அடையாததால் அவரிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவை ஒரு டியூன் போட்டுத்தரும்படி வெங்கடேஷ் கேட்டிருக்கிறார். அப்போது இளையராஜா போட்டுக் கொடுத்த டியூன் அவர்களுக்குப் பிடித்துப் போகவே அதை வெங்கடேஷிடம் கூறியிருக்கிறார்கள். இளையராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் இசையமைப்பாளர் வெங்கடேஷ் இளையராஜாவின் டியூனை ஓகே செய்தார்.

மீண்டும் கல்லா கட்டிய சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்.. 31 ஆண்டுகளுக்குப் பிறகு குறையாத அதே மவுசு

இப்படி இளையராஜா முதன் முதலாக சினிமாவுக்காக உருவாக்கிய டியூனில் அமைந்த பாடல் தான் தஞ்சாவூரு சீமையிலே தான் தாவி
வந்தேன் பொன்னியம்மா!
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா!

என்ற பாடல். காவிரி நதியின் பிறப்பு முதல் கடைமடை வரை செல்லும் வரை காவிரியைப் போற்றுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கும். இளையராஜாவின் டியூனுக்கு முதன் முதலில் பாட்டு எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். எனினும் படம் வெளியான போது இசையமைப்பாளர் பெயரில் வெங்கடேஷ் பெயர் மட்டுமே இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.ஜானகி, சசிரேகா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியிருப்பர். பாடகி சசிரேகாவிற்கு இந்தப் பாடல் தான் முதல் பாடலாகும்.

இதே டியூனில்தான் இளையராஜா எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற பாடலை இசையமைத்திருப்பார்.