சத்யராஜிக்கு எம்ஜிஆர் கொடுத்த பரிசு….! அட புத்திசாலித்தனமா வாங்கிருக்காரே!

By Sankar Velu

Published:

தமிழ்த்திரை உலக நடிகர்களில் புரட்சித் தமிழன் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் சத்யராஜ். அவருடைய நடிப்பில் பல படங்களில் எம்ஜிஆரின் பாணியை தனது ஸ்டைலாக நடித்துக் காட்டுவார். நடந்தும், மூக்கில் இரு விரல்களால் எம்ஜிஆரைப் போல ஸ்டைலாக சுண்டி விட்டும் காட்டுவார்.

சத்யராஜைப் பொருத்தவரை அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அதனால் தான் இப்படிப்பட்ட காட்சிகளைப் படத்தில் வரும்படி பார்த்துக் கொள்வார்.

MGR
MGR

அவரது பழைய படங்களில் எம்ஜிஆர் மாதிரி சட்டையை டைட்டாக அணிந்து கொள்வார். உதாரணத்திற்கு ரிக்ஷா மாமாவில் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் சாயல் தெரியும். நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் அந்த மேனரிசம் இருக்கும்.

அப்படி எம்ஜிஆர் மீது தணியாத பற்று கொண்டவர். சிறுவயதில் அவரது பல படங்களைப் பார்த்து சினிமா ஆசை கொண்டு நடிக்க வந்தவர் தான் சத்யராஜ்.

அந்தவகையில் அவர் நடிகர் ஆனதும் எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது ஒரு தரமான சம்பவம் நடக்கிறது. அங்கு தான் எம்ஜிஆரிடம் இருந்து மறக்க முடியாத அந்தப் பரிசு சத்யராஜிக்குக் கிடைக்கிறது. அது என்ன? எப்படி கிடைத்ததுன்னு பார்க்கலாமா…

இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

எம்ஜிஆர் பொதுவாக வாட்ச் பரிசாகக் கொடுப்பார்கள் என்று சொல்வார்களே அது உண்மையா? என்று வாசகர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

எம்ஜிஆருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி கிடைத்த சந்தர்ப்பங்களில் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. என்ன கேட்டாலும் செய்து தருகிறேன்னு கேட்டாரு. பலமுறை என்னிடம் அப்படி கேட்டுருக்காரு. ஆனாலும் என்ன காரணத்தினாலோ தெரியலை. அவரிடம் எதுவும் கேட்கணும்னு எனக்குத் தோணலை.

சத்யராஜூம், நானும் எம்ஜிஆரை சந்தித்த போது கூட இப்படி ஒரு கேள்வியை மீண்டும் கேட்டார் எம்ஜிஆர். அப்போ எனக்கு எதுவும் கேட்கணும்னு தோணலை.

ஆனா சத்யராஜ் சார் புத்திசாலித்தனமாக ‘நீங்க எக்ஸைஸ் பண்ற கருவிகளில் ஏதாவது கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்’னு கேட்டாரு. அதைத் தொடர்ந்து தான் தான் உடற்பயிற்சி செய்கின்ற கர்லா கட்டையை சத்யராஜிக்குப் பரிசாக வழங்கினார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.