விசிலடித்தே டியூன் போட்ட இசைஞானி.. உருவான சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் காதல் பாடல்..

By John A

Published:

இசைஞானி இளையராஜா பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் இல்லாத போதும் தனது குழுவினருக்கு இசைக் குறிப்புகளைக் கொடுத்து விட்டு அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விடுவார். இதனால் தான் அவரால் 1100 படங்களைத் தாண்டி இசையமைக்க முடிந்தது. மேலும் தனது வலது கரமாக அவரின் தம்பி கங்கை அமரன் உடன் இருந்தார். இப்படி அண்ணணும், தம்பியும் திரையுலகில் செய்யாத சாதனைகளே கிடையாது. அமிர்த வர்ஷினி ராகத்தினை ஒரு பாடலுக்கு இசைத்து மழையையே வரவழைத்தவர் இசைஞானி இளையராஜா. அந்த அளவிற்கு இசையில் சக்கரவர்த்தியாக விளங்கி வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் எம்.எஸ்.விஸ்வநாதானுக்கு அடுத்தபடியாக இசைஞானி இளையராஜாவின் பாடல்களே மனிதர்களின் அனைத்து உணர்வுகளிலும் பொருந்திப் போகிறது. மன அமைதிக்கும், கொண்டாட்டத்திற்கும், உறவுகளுக்கும் என புதுப்புது பாடல்களைக் கொடுத்து அத்தனை பாடல்களையும் சூப்பர்ஹிட் பாடலாகக் கொடுத்து சாகா வரம்பெற்றிருக்கிறார் இளையராஜா.

சென்னை சம்பளத்தை மிஞ்சும் கிராமத்து ஜுஸ் கடை.. வைரலான ஆட்கள்தேவை பேனர்.. சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இப்படி இளையராஜா எத்தனையோ விதமான பாடல்களைக் கொடுத்திருந்தாலும் விசிலடித்தே ஒரு டியூன் போட்டுக் கொடுத்து அதனையும் சூப்பர்ஹிட் பாடலாக மாற்றியிருக்கிறார். அதிலும் இந்தப் பாட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடல் தான் காதலின் தீபம் ஒன்று பாடல்.. இன்றும் காதலால் கசிந்துருகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது காதல் உணர்வுகள் மேலும் ஊற்றெடுக்கும். தங்கள் துணையை நினைத்து மனம் லயிக்கும்.

1984-ல் வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தினை ராஜசேகர் இயக்கியிருந்தார். இசைஞானியின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக காதலின் தீபம் ஒன்று பாடல் பதிவின் போது இளையராஜாவுக்கு குடலிறக்க நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாம். இதனால் அவரால் டியூன் போட முடியவில்லை. எனவே வாயில் விசில் அடித்தே இந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கியிருக்கிறார். சாருகேசி ராகத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படி தனது உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது படத்தின் வெற்றிக்காக மருத்துவமனையில் இருந்தவாறே அழகான மெட்டைக் கொடுத்து அற்புதமான காதல் பாடலை உருவாக்கினார் இளையராஜா.