தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறிய ஆர்யா.. இவ்வளவு டெடிகேஷனா?

By John A

Published:

மறைந்த ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2003ல் உருவான உள்ளம்கேட்குமே திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தவர் தான் நடிகர் ஆர்யா. எனினும் இவர் நடித்த அடுத்த படமான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் படமே முதலில் வெளிவந்தது. இந்தப் படத்தில் முரட்டு வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருந்தார்.

மேலும் முதல் படமாக விளங்கிய உள்ளம் கேட்குமே திரைப்படம் தயாரிப்பு நிர்வாகக் கோளாறுகள் காரணமாக பிரச்சனையில் இருந்தது. இதனையடுத்து ஆர்யா இதில் தலையிட்டு தயாரிப்பு கவுன்சிலிடம் பேசி 10 தயாரிப்பாளர்களிடம் ரூ. 2 லட்சம் பெற்று படத்தினை வெளியிட்டிருக்கிறார். அதோடு மட்டும் நில்லாமல் இந்த 10 தயாரிப்பாளர்களுக்கு நான் உங்கள் படங்களில் நடித்துத் தருகிறேன் என்று வாக்குறுதியும் அளித்திருக்கிறார்.

பொதுவாகவே ஆர்யாவின் படங்கள் என்றாலே மினிமம் கியாரண்டிக்கு உறுதி. காதல், காமெடி என கமர்ஷியல் நடிகராக ஆர்யா அறியப்பட்டாலும் அவரை உச்சத்தில் நிறுத்திய படம் தான் நான் கடவுள். இதில் காசி அகோரியாக நடித்துப் புகழ் பெற்றார். ஆர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தப் படத்தினை பாலா பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளர் கே.சீனிவாசனுடன் இணைந்து தயாரித்திருந்தார். எனினும் நான் கடவுள் படத்தின் பணிகள் ஜவ்வாக இழுத்துக் கொண்டே செல்லவே மிக கால தாமதம் ஆகியது. மேலும் ஆர்யாவும் அந்த கெட்டப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை.

இந்த ஒரு விஷயத்துக்காக இளைய மகனை கை நீட்டிய கேப்டன் விஜயகாந்த்.. அன்று மாறிய பழக்கம்..!

எனவே தயாரிப்பாளர் சீனிவாசனிடம் அடுத்த படம் உங்களுடன் உடனே நடிக்கிறேன் என்று கூறி 50 லட்சம் சம்பளத்தினை முன்பணமாகப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் நான் கடவுள் படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆகி நல்ல வரவேற்பினைப் பெற ஆர்யாவின் மார்க்கெட் எகிறியது. அப்பவே தனது சம்பளத்தினை 1.5 கோடியைத் தொட்டிருந்தார் ஆர்யா.

இதனையடுத்து ஏற்கனவே சொன்னபடி தயாரிப்பாளர் சீனிவாசனுக்கு அவர் கேட்காமலேயே இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தினை நடித்துக் கொடுத்தார். இந்தப் படத்தில் மேற்கொண்டு உங்கள் சம்பளம் என்ன வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்க, ஹீரோயின் மட்டும் நல்ல ஹீரோயின் போடுங்க என்று கூறியிருக்கிறார். இதன்படி நயன்தாரா உள்ளே வந்திருக்கிறார்.

மேலும் இசை யுவன் சங்கர்ராஜா இசையமைக்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் ஆர்யா படத்தின் பணிகள் முடிந்ததும் தயாரிப்பாளரிடம் சென்று இந்தப் படத்தினை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை வாங்கி அப்போது ரெட் ஜெயண்ட் மூவி உதயநிதி ஸ்டாலினிடம் கொண்டு படத்தினைப் போட்டுக் காட்ட அவருக்கும் பிடித்துப் போய் விநியோகம் செய்திருக்கிறார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் தயாரிப்பாளருக்குச் சொன்னபடி நடித்துக் கொடுத்து மேற்கொண்டு சம்பளம் எதுவும் கேட்கவில்லையாம். இப்படி தயாரிப்பாளர்களின் ஹீரோவாக ஆர்யா விளங்குவதால் தான் மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை, ராஜா ராணி மாதிரியான தரமான படங்கள் அவரைத் தேடி வருகின்றன.