பிள்ளைகளின் கடமை- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 5

By Staff

Published:

558e4d80bba9048699d9014dabdbf070

பாடல்:

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக்கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிற்றைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனுமான எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்:

இன்னாரை பெற்றது இன்னாரென சொல்லி மற்றவர் பாராட்டும்படி நடக்கவேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. தேவகிக்கு கண்ணனை பெற்றதால் பெருமை உண்டானது. அதுப்போல எல்லா பிள்ளைகளும் சுமந்த அன்னைக்கும், வளர்க்கும் அப்பனுக்கு செய்ய வேண்டுமென்பதே இப்பாடலின் பொருள்.

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்….. 

Leave a Comment