தமிழக அரசியல் மற்றும் பொதுத் தகவல் தொடர்பு தளத்தில் தற்போது ஒரு புதிய கலாச்சாரம் மிக வேகமாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, புதிய தலைமுறை அரசியல் கட்சிகளும், தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் பாரம்பரிய ஊடகங்களான ‘மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களை’ முற்றிலும் புறக்கணிக்கும் ஒரு போக்கை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர். இனிமேல் தமிழ்நாட்டிற்கு யார் முதலமைச்சராக வந்தாலும், அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கோ அல்லது ஊடகங்களின் விவாத மேடைகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்க போவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பத்திரிகையாளர்களாகிய நீங்களோ, உங்கள் ஊடகங்களோ எங்களுக்கு தேவையில்லை, உங்களை நாங்கள் எங்களது எல்லைக்குள்ளேயே சேர்க்க போவதில்லை” என்று அரசியல் கட்சிகள் தற்பொழுது மிக ஓப்பனாகவே பிரகடனம் செய்யத் தொடங்கிவிட்டன.
இந்த அதிரடியான மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம் என்னவென்றால், தற்போதைய புதிய அரசியல் சக்திகளோ அல்லது தவெக போன்ற கட்சிகளோ மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களை நம்பி இந்த உயரத்திற்கு வரவில்லை என்பதுதான். கடந்த கால தேர்தல் களங்களையும், அரசியல் நகர்வுகளையும் உற்று நோக்கினால், இந்த முக்கிய ஊடகங்கள் அனைத்தும் தங்களுக்கு எதிராகத்தான் நின்றன என்பதும், தங்களின் வளர்ச்சிக்கு அவை எவ்வித முற்போக்கான ஆதரவையும் அளிக்கவில்லை என்பதும் அவர்களின் அழுத்தமான குற்றச்சாட்டாக உள்ளது. தங்களை இருட்டடிப்பு செய்ய நினைத்த ஊடகங்களை சார்ந்து இனிமேலும் வாழ வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் தங்களின் செயல்பாடுகள் மூலம் நிரூபித்து காட்டியுள்ளனர்.
பாரம்பரிய ஊடகங்களை முற்றிலுமாக புறக்கணிக்கும் இவர்களது இந்த துணிச்சலான முடிவுக்கு பின்னால் இருக்கும் ஆகச்சிறந்த ஆயுதம் ‘சோசியல் மீடியா’ எனப்படும் சமூக வலைத்தளங்கள் ஆகும். முழுக்க முழுக்க சோசியல் மீடியாக்களின் அசாத்திய பலத்தை மட்டுமே நம்பி களம் இறங்கிய இவர்களுக்கு, இன்றைய டிஜிட்டல் உலகம் அள்ளி வழங்கியிருக்கும் ஆதரவே போதுமானதாக உள்ளது. “மக்களுக்கும் எனக்கும் மத்தியில் இருக்கும் இடைத்தரகர்களாகிய நீங்கள் எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று பிரஸ் மற்றும் மீடியாக்களை பார்த்து இவர்கள் நேரடியாகவே கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு செய்தியை கொண்டு சேர்க்க ஊடகங்கள் என்ற ஒரு தளம் இனி அவசியமற்ற ஒன்றாக மாறிப்போயுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் இன்று உலக அளவில் அடைந்துள்ள அசுர வளர்ச்சியானது, அரசியல்வாதிகளுக்கு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான அத்தனை வசதிகளையும் மிக எளிமையாக செய்து கொடுத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் என்று ஒன்றுமில்லாத கால கட்டத்தில், அதாவது ஒரு 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னால், அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளையும் செய்திகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றால், அதற்கு தினத்தந்தி போன்ற நாளிதழ்களையோ அல்லது குறிப்பிட்ட சில தொலைக்காட்சி மற்றும் வானொலிகளையோ மட்டுமே நம்பி வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்று ஒட்டுமொத்த தகவல் தொடர்பு துறையின் முகவரியே டிஜிட்டல் மயமாக முழுமையாக மாறிவிட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகமே மனிதனின் கையளவுக்குள் சுருங்கிவிட்டது. ஒரு தலைவன் தான் சொல்ல நினைக்கும் கருத்தையோ அல்லது அரசின் திட்டங்களையோ மக்களிடம் சேர்க்க விரும்பினால், இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் போடுவதன் மூலமாகவோ, யூடியூபில் நேரலையில் பேசுவதன் மூலமாகவோ அல்லது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிடுவதன் மூலமாகவோ நொடிப்பொழுதில் கோடிக்கணக்கான மக்களை சென்றடைய முடிகிறது. தொழில்நுட்பம் கொடுத்திருக்கக்கூடிய இந்த அதிநவீன வசதிகளை தங்களின் அரசியல் வளர்ச்சிக்கு மிக சாமர்த்தியமாக அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். “இத்தனை தொழில்நுட்ப வசதிகள் கைவசம் இருக்கும்போது, எங்களுக்கு நடுவில் நாரதர் வேலை பார்க்க நீங்கள் யார்?” என்ற தொனியில் மீடியாக்களுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, “உங்களை நாங்கள் எங்களது செய்தியாளர் சந்திப்பிற்கோ அல்லது விழாற்களுக்கோ அழைக்கவே இல்லை” என்று ஊடகங்களை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு இன்றைய அரசியல் களம் மாறியுள்ளது. செய்திகளை திரித்து கூறுவதும், பரபரப்புக்காக வதந்திகளை பரப்புவதும், தங்களுக்கு சாதகமாக சில அரசியல் பிம்பங்களை உருவாக்குவதுமே மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களின் வேலையாக இருக்கிறது என்ற எண்ணம் பரவலாக எழுந்துள்ளதால், மக்கள் நேரடியாக தலைவர்களின் சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர தொடங்கிவிட்டனர். இந்த புதிய டிஜிட்டல் கலாச்சாரம், ஊடகங்களின் ஏகாதிபத்தியத்தை உடைத்து, மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையேயான நேரிடையான, வெளிப்படையான ஆரோக்கியமான உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
