தமிழக அரசியல் வரலாற்றில் தாங்கள் பெற்ற படுதோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு பதிலாக, இன்னும் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் முந்தைய ஆளும்கட்சியினர் புலம்பி வருவது வேடிக்கையாக அமைந்துள்ளது. தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், “ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்க போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பினால் உண்மையை போட்டுடைப்போம்” என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவு அவரது தற்போதைய அரசியல் இயலாமையையே காட்டுகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்தே, திமுக தலைமை எங்கு சென்றாலும் தங்களின் தோல்விக்கு சமூக வலைத்தளங்கள் தான் காரணம் என்று கூறி வருவதை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து விமர்சித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சரின் இந்த பதிவை கண்ட பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து திமுக தலைமையை கடுமையாகச் சாடி வருகின்றனர். குறிப்பாக, ஒரு திருமண விழாவில் கூட தங்களின் அரசியல் தோல்வியை பற்றியே பேசி, இன்ஸ்டாகிராம் மற்றும் குழந்தைகள் மூலமாகத்தான் புதிய அரசு அமைந்துவிட்டது என்று ஸ்டாலின் புலம்பியதை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்துள்ளனர். “ஐயா, கல்யாணத்துக்கு போன இடத்துல கூட இப்படி புலம்ப வச்சுட்டாங்களே! டேய் இன்ஸ்டாகிராம், ஏன்டா இப்படி பண்ணுனீங்க?” என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ஒரு சுப நிகழ்ச்சியில் கூட தோல்வி பயத்தால் ஒப்பாரி வைக்கும் அளவிற்கு திமுகவின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக மாறிவிட்டதை சுட்டிக்காட்டி தங்களின் ஆதங்கத்தையும் எள்ளலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில், தங்களுக்கு கிடைத்த முழு அதிகாரத்தையும் மக்களின் நலனுக்காக பயன்படுத்தாமல், இறுமாப்புடனும் உச்சக்கட்ட தலைக்கணத்துடனும் செயல்பட்டதன் விளைவைத்தான் இன்று அக்கட்சி அனுபவித்து வருகிறது என்று சொந்தக் கட்சியினரே புலம்ப தொடங்கியுள்ளனர். “இப்ப இருக்கிற அறிவு ஆளுங்கட்சியா இருக்கும் போது இருந்திருந்தா, ஆட்சி மீது நடத்தப்பட்ட பொய் புகார்களை முறியடிச்சு இரண்டாவது முறையா ஆட்சி அமைச்சிருப்போம்; உச்சக்கட்ட தலைக்கணத்தோட ஆடுனீங்க, இப்போ சொந்த கட்சிக்காரனே கைவிட்டுட்டான்” என்று உடன்பிறப்புகளே தங்களின் அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர். ஆட்சியில் இருந்தபோது மக்கள் மத்தியிலும், சொந்த கட்சி தொண்டர்கள் மத்தியிலும் எழுந்த உண்மையான குமுறல்களை துளியும் காதுகொடுத்து கேட்காமல், வெறும் விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே காலத்தை கடத்தியதுதான் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்பதை அவர்கள் இப்போதாவது உணர வேண்டும்.
ஊருக்கே தெரிந்த தங்களின் கடந்தகால ஐந்து வருட நிர்வாக சீர்கேடுகளை மறைப்பதற்காக, இப்போது திடீரென்று சமூக ஊடகங்கள் மீது பழியை போடுவது மிகவும் மலிவான அரசியல் உத்தியாகும். கடந்த திமுக ஆட்சியில் தங்களின் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளுக்காக துப்புரவு பணியாளர்கள், அரசு ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் என பல்வேறு தரப்பு உழைக்கும் வர்க்கத்தினர் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்களது கோரிக்கைகள் மீது எவ்வித தகுந்த நடவடிக்கையும் எடுக்காமல் அடக்குமுறையைக் கையாண்டு அலட்சியப்படுத்தியதே இன்றைய தோல்விக்கு அஸ்திவாரம் போட்டது. மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக போராடிய போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, தேர்தலில் மக்கள் தங்களுக்கு படுதோல்வியை பரிசாகக் கொடுத்தவுடன், “நாங்கள் இன்ஸ்டாகிராமால்தான் தோற்றோம்” என்று ஒரு குழந்தையை போல காரணம் கூறுவது இவர்களின் நிர்வாகத் திறமையின்மையையே அம்பலப்படுத்துகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் சந்தித்த கடுமையான ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஆளும்கட்சி நிர்வாகிகளின் அதிகார அராஜகங்கள் ஆகியவற்றை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. தங்களின் தவறுகளையும் இயலாமையையும் மூடிமறைப்பதற்காக ஒட்டுமொத்த ஊடக பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்ட திமுகவினருக்கு, விழிப்புணர்வு பெற்ற இளைய தலைமுறையினர் தங்களின் வாக்குரிமையின் மூலம் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். தங்களின் தோல்விக்கான உண்மையான காரணங்களை உணராமல், இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மீது தொடர்ந்து பழிபோட்டு வருவது, திமுக தலைமை இன்னும் தங்களைச் சுற்றியுள்ள போலி துதிபாடிகளின் மாய உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையே தெளிவாக நிரூபிக்கிறது.
இனியாவது வெற்று புகார்களை கூறுவதையும், புதிய அரசின் மீது அவதூறுகளை பரப்புவதையும் நிறுத்திக்கொண்டு, எதிர்க்கட்சியாக தங்களின் கடமையை செய்ய திமுக முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தி வருகின்றனர். உண்மை என்னவென்றே தெரியாமல் ஐந்து ஆண்டுகள் விளம்பர முதலமைச்சராக இருந்துவிட்டு, இப்போதும் கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான பதிவுகளை வெளியிடுவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. மக்களின் மனங்களை வென்று, சட்டமன்றத்தில் அசைக்க முடியாத பெரும்பான்மையோடு கம்பீரமாகத் தன்னாட்சியைத் தொடங்கியுள்ள புதிய முதலமைச்சர் விஜய் அவர்களின் தூய்மையான நிர்வாகத்திற்குத் தமிழக மக்கள் தங்களின் முழு ஆதரவையும் வழங்கி வரும் வேளையில், திமுகவின் இத்தகைய புலம்பல் பதிவுகள் அவர்களின் அரசியல் அஸ்தமனத்தையே விரைவுபடுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
