தமிழக அரசியலில் எப்போதும் இல்லாத ஒரு புதுமையான மற்றும் நாகரிகமான மாற்றத்தை முதலமைச்சர் விஜய் முன்னெடுத்து வருகிறார். கடந்த காலங்களில் அரசியல் களம் என்பது தனிப்பட்ட பகையுணர்வோடு, ஒரு தலைவரின் வீட்டு வாசலை மற்றவர் மிதிக்காத சூழலையே கொண்டிருந்தது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் களத்தில் விஜயையும் அவரது கொள்கைகளையும் மிகக்கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். பல மேடைகளில் “தரைமட்டம்” என்று சொல்லத்தக்க வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் சீமானின் இல்லத்திற்கே நேரில் சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்திருப்பது தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சந்திப்பு,
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்”
என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஒரு நேரடி உதாரணமாக அமைந்துள்ளது. தனக்கு தீங்கு செய்தவர் அல்லது தன்னை தரக்குறைவாக விமர்சித்தவர் நாணமடையும் வகையில், அவருக்கு நன்மையே செய்து அவரை நெகிழ வைப்பதுதான் ஒரு மாண்புமிகு தலைவருக்கு அழகு. அந்த வகையில், சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி போன்றவர்கள் முன்வைத்த கடுமையான தனிநபர் விமர்சனங்களுக்கு தனது அமைதியான மற்றும் நாகரிகமான அணுகுமுறையாலேயே விஜய் பதிலடி கொடுத்துள்ளார். “மேன்மக்கள் மேன்மக்களே” என்பதை தனது ஒவ்வொரு அசைவிலும் அவர் நிரூபித்து வருகிறார்.
அரசியல் ரீதியான முரண்பாடுகள் என்பது வேறு, தனிப்பட்ட மரியாதை என்பது வேறு என்பதை இன்றைய இளைஞர்களுக்கு இந்த சந்திப்பு உணர்த்தியுள்ளது. சீமான் இல்லத்தில் நடைபெற்ற இந்த உரையாடல், தமிழகத்தின் தமிழ் தேசிய அரசியலுக்கும், தவெக-வின் கொள்கைக்கும் இடையிலான ஒரு ஆரோக்கியமான விவாத புள்ளியாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தன்னை விமர்சித்தவர்களை தேடி சென்று அவர் கொடுக்கும் இந்த மரியாதை, தமிழகத்தில் நிலவி வந்த பழிவாங்கும் அரசியலுக்குச் சாவுமணி அடித்துள்ளது. இது வெறும் அரசியல் கணக்கு மட்டுமல்ல, ஒரு முதிர்ச்சியான தலைவனின் பண்பட்ட செயல்.
இந்த நிகழ்வு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாம் தமிழர் கட்சி தொண்டர்களையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துள்ளது. “தரக்குறைவாக பேசியவர்களே வெட்கப்படும் அளவிற்கு” விஜய் நடந்து கொண்ட விதம், அவரது அரசியல் ஆளுமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. அதிகாரத்திமிர் இல்லாமல், அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு முதலமைச்சரை தமிழகம் இப்போதுதான் பார்க்கிறது. இந்த சந்திப்பின் மூலம், தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் அனைத்து சக்திகளும் ஒருமித்த கருத்துடன் பயணிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
இறுதியாக, முதலமைச்சர் விஜயின் இந்த அதிரடி “நாகரிக அரசியல்” பயணம், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக அமைய போகிறது. மற்ற தலைவர்களை போல் விமர்சனங்களுக்கு பதிலுக்கு பதில் பேசாமல், தனது நேர்மறையான செயல்களின் மூலம் அவர்களை தன் பக்கம் ஈர்ப்பது ஒரு தனித்துவமான ராஜதந்திரம். “பார்த்தீங்களா… மேன்மக்கள் மேன்மக்கள் தான்” என்று மக்கள் பேசும் அளவிற்கு, விஜய் தனது தரத்தையும் தகுதியையும் உயர்த்தி பிடித்துள்ளார். இனிவரும் காலங்களில் இத்தகைய சந்திப்புகள் தமிழகத்தில் நிலவும் அரசியல் வன்மத்தை குறைத்து, ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
