அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள வில்மிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த மிரட்டல் குறித்த தகவல் கிடைத்தவுடன், பாதுகாப்பு கருதி விமான நிலையம் மூடப்பட்டது.
வட கரோலினா வெடிகுண்டு நிபுணர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விமான நிலைய முனையம் முழுவதும் அணு அணுவாக சோதனை நடத்தினர். நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்ச் சோதனையில், சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இறுதியில், அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, விமான நிலைய வளாகம் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டு, சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் செயல்பாடுகள் தொடங்கின.
பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்ற போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்திற்கு மேலேயுள்ள வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டு, புறப்பட வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. “அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டது, பொறுமை காத்த பயணிகளுக்கு நன்றி” என விமான நிலைய நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வான்வெளி மூடப்பட்டதால் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமானது.
சமீபகாலமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இது போன்ற போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்சாஸ் சிட்டி சர்வதேச விமான நிலையத்திலும் இதேபோன்ற ஒரு போலி மிரட்டலால் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இது குறித்துக் கருத்து தெரிவித்த FBI இயக்குனர் காஷ் படேல், “இத்தகைய மிரட்டல்கள் பெரும் குற்றமாகும், இதற்கு பின்னால் இருப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச்சூழல், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நேரடி மோதல்கள், இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஒரு பின்னணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த உலகளாவிய பதற்றத்தால், அமெரிக்காவிற்குள் இருக்கும் முக்கிய பொது இடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் கண்காணிப்புகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
வில்மிங்டன் விமான நிலையத்தில் சோதனைகள் முடிந்து நிலைமை சீரானாலும், பயணிகளிடையே ஒருவித அச்சம் நீடிக்கிறது. சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகள் அல்லது இணையவழி மிரட்டல்கள் வரும்போது, அதிகாரிகள் எவ்வித அபாயத்தையும் எடுக்காமல் முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். தற்போது விமான போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வந்தாலும், பயணிகள் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த தாக்குதல் மிரட்டலுக்கு பின்னால் உள்ள மர்ம நபர்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
