தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான 1,000 ரூபாயுடன், மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கான முன்பணம் மற்றும் 2,000 ரூபாய் கோடைக்கால ஊக்கத்தொகை என மொத்தம் 5,000 ரூபாய் ஒரே தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் சூழ்ச்சிகளால் இந்த திட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், வெயில் கால தேவைகளுக்காகவும் இந்த தொகை முன்கூட்டியே வழங்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். விடுமுறை நாட்களை தவிர்க்கும் நோக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பே பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் இந்த 5,000 ரூபாய் இன்னும் சேரவில்லை என்றால், பதற்றமடைய தேவையில்லை. முதலில் உங்கள் வங்கியின் பாஸ்புக் அல்லது ஸ்டேட்மெண்ட்டை சரிபார்க்கவும்; எஸ்எம்எஸ் வராத சூழலிலும் பணம் வரவு வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அப்படியும் பணம் வரவில்லை என்றால், www.stalin.tn.gov.in வலைத்தளத்திற்கு சென்று உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை சரிபார்க்கவும். அங்கு உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டும் பணம் வரவில்லை என்றால் மட்டுமே அடுத்த கட்டமாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது. இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில், Grievance Redressal வசதி உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே ரேஷன் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி மூலம் லாகின் செய்து, உங்கள் புகாரை பதிவு செய்யலாம். 500 வார்த்தைகளுக்குள் உங்கள் விளக்கத்தை சமர்ப்பித்தால், அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். குறிப்பாக இரண்டாம் கட்ட முகாம்களில் பங்கேற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் புதியதாக இணைய விரும்புவோருக்கான தகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. 21 வயதை கடந்த பெண்களாக இருத்தல் அவசியம். அத்துடன் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நஞ்சை நிலம் 5 ஏக்கர் அல்லது புஞ்சை நிலம் 10 ஏக்கருக்கு மேல் இருக்கக்கூடாது. மின்சாரப் பயன்பாடு ஆண்டுக்கு 3,600 யூனிட்களுக்கு குறைவாகவும், நான்கு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த அளவுகோல்களுக்குள் வரும் பெண்கள், இ-சேவை மையங்கள் அல்லது சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதிய விண்ணப்பங்களை அளித்தவர்கள், உங்கள் ஸ்டேட்டஸ் ‘பரிசீலனையில்’ இருந்தால் கவலைப்பட வேண்டாம். அரசு புதிய பயனாளர்களை சேர்க்கும் போது, ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்யும். 2023-இல் 1.06 கோடியாக இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை, தற்போது 1.23 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, தகுதியுள்ள நபர்களுக்கு தாமதமானாலும் நிச்சயம் உரிமை தொகை சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

