ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுடனான முழு அளவிலான போருக்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தானுக்குள் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளூர் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த கவாஜா ஆசிஃப், “நாங்கள் இந்தியாவை எந்த சூழ்நிலையிலும் புறக்கணிக்கவும் இல்லை, நம்பவும் இல்லை. என்னுடைய பகுப்பாய்வின்படி, எல்லை அத்துமீறல்கள் அல்லது தாக்குதல்கள் உட்பட, முழு அளவிலான போர் அல்லது இந்தியாவிடமிருந்து எந்தவொரு விரோதமான வியூகத்தையும் நான் நிராகரிக்க முடியாது. நாம் முழுமையாக விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உயிரிழப்பை ஏற்படுத்திய தற்கொலை தாக்குதல்களை ஆப்கான் நாட்டவர்கள் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டிய சில நாட்களுக்கு பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பாகிஸ்தானை தாக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் ஆதரவு அளிப்பதாகவும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் உள்ள கீழமை நீதிமன்றம் அருகே நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 27 பேர் காயமடைந்தனர். இது நாட்டிற்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பு என்றும், பாகிஸ்தான் இப்போது போர் நிலையில் உள்ளது என்றும் ஆசிஃப் எச்சரித்தார்.
இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டினார். இந்தியாவால் தூண்டப்பட்ட பயங்கரவாத முகவர்கள் மூலம் தாக்குதல் நடந்ததாக அவர் குறை கூறினார்.
ஷெரீப்பின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ஆதாரமற்ற மற்றும் அடிப்படை இல்லாத இந்த குற்றச்சாட்டுகளை, தெளிவற்ற நிலையில் உள்ள பாகிஸ்தான் தலைமை கூறுகிறது. இது, அதன் சொந்த உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்தும், இராணுவத்தால் தூண்டப்பட்ட அரசியலமைப்பு குழப்பத்திலிருந்தும் கவனத்தை திசை திருப்ப, இந்தியாவுக்கு எதிராக பொய்யான கதைகளை கட்டியெழுப்பும் ஒரு தந்திரம்” என்று தெரிவித்து, இந்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக நிராகரித்தார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சமீபத்தில், “ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ட்ரெய்லர் மட்டுமே” என்று கூறியது, பாகிஸ்தானின் பாதுகாப்பு கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த கவலைகளை வெளியே காண்பித்து கொள்ளாமல் இந்தியாவுடனான ஒரு முழுமையான போருக்கு தயார் என்று கூறுவது காமெடியின் உச்சகட்டம் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
