இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் அண்டை நாடான இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆண்கள் ஆசிய கோப்பையை போலவே, பெண்கள் உலகக்கோப்பை மோதலிலும், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா ஆகியோர் டாஸ் போடும்போது பரஸ்பரம் கை குலுக்கி கொள்ளவில்லை. இது ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒருவிதமான உரசலை ஏற்படுத்தியது.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வாக, டாஸ் போடும்போது ஒரு குழப்பம் ஏற்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் ‘டெயில்ஸ்’ என்று கூறிய போதும், ஆஸ்திரேலிய தொகுப்பாளர் மெல் ஜோன்ஸ் தவறுதலாக ‘ஹெட்’ என்று அறிவித்தார். ஹெட் விழுந்த நிலையில், விதிப்படி பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் இறுதி நேரத்தில், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
248 ரன்கள் என்ற சவாலான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர் சிட்ரா அமின் மட்டுமே தனி ஒருவராக போராடினார். அவர் அரை சதம் கடந்து 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்க தவறியதால், பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் வெறும் 159 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியப் பந்துவீச்சில், கிராந்தி கவுட் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஸ்நேஹ் ரானா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
விறுவிறுப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை. டாஸ் போடும்போது கை குலுக்காதது முதல் களத்தில் நடந்த உரசல் வரை சில சம்பவங்கள் கவனத்தை ஈர்த்தன:
போட்டியின் 22வது ஓவரில் பாகிஸ்தான் வீராங்கனை நஷ்ரா வீசிய பந்தை ஹர்மன்ப்ரீத் கவுர் தடுத்தபோது, ஆத்திரமடைந்த நஷ்ரா அவரை முறைத்து பார்த்தார். அதற்கு ஹர்மன்ப்ரீத் கவுர் வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். அவர் என்ன கூறினார் என்பது சரியாக பதியப்படாத நிலையிலும், இந்த சம்பவம் இணையதளத்தில் விவாத பொருளானது.
இந்தியா பேட்டிங் செய்துகொண்டிருந்த 34வது ஓவரில், மைதானத்தில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தது. அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தானே பூச்சிக்கொல்லி ஸ்பிரே அடித்த செயல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
மொத்தத்தில், இந்த ஆட்டம் இந்திய அணிக்கு ஒரு சிறப்பான வெற்றியையும், ரசிகர்களுக்கு வழக்கம்போல இந்தியா-பாகிஸ்தான் மோதலில் எதிர்பார்க்கப்படும் சில பரபரப்பான தருணங்களையும் அளித்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
