அம்பாளைக் கொண்டாடும் 10 நாள் விழா. நவராத்திரி என்பது 9 நாள்கள். அதன் நிறைவு விழாவை 10வது நாளில் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த வகையில் நாளை (23.9.2025) தொடங்கி அக்டோபர் 2 அன்று 10ம் நாள் விழாவான விஜயதசமி வருகிறது. நவராத்திரியை எப்படி துவங்குவது? கொலு வைப்பது எப்படின்னு பார்க்கலாமா…
நவராத்திரி நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. கொலு வைப்பவர்கள் தொடர்ந்து வைக்கலாம். கொலுவை 3, 5, 7, 9 என அதிகபட்சமாக 11 படிகளாக வைத்துக் கொள்ளலாம்.
இடவசதிக்கேற்ப நாம் இதை அமைத்துக் கொள்ளலாம். கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைக்க வேண்டும். உயிர்கள் எப்படி தோன்றின என்பதை விளக்குவதுதான் இந்த நவராத்திரி கொலு. மரம், செடி, கொடி ஓரறிவு. நத்தை, சங்கு ஈரறிவு. கரையான், எறும்பு மூவறிவு. நண்டு, வண்டு நாலறிவு. பறவை, ஜீவன் ஐந்தறிவு. மனிதன் ஆறறிவு. அதன்படி வரிசையாக ஒன்றாம் படியில் இருந்து வைக்க வேண்டும்.
தேவர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்களை ஏழாம் அறிவு என 7ம் படியிலும், 8வது படியில் அஷ்டலட்சுமி, தசாவதார செட் ஆகியவற்றை வைக்க வேண்டும். 9ம் படியில் முப்பெரும் தேவியர்களை வைக்க வேண்டும். இதுதான் நிறைவு படி. 3 படி எனில் மரம், செடி, கொடி முதல் படி. அடுத்து மனிதர்கள், தேவர்கள், அடுத்து தெய்வங்கள் என வைக்கலாம்.
பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கி பார்க்க அழகாக அந்தந்த வரலாறுகளை எடுத்துரைப்பது போல வைக்க வேண்டும். அது ஒரு கலை. படி வைக்க முடியாதவர்கள் பூஜை அறையில் கலசம் வைத்து பூஜை செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் அம்பாளின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு அலங்காரம், பூஜை செய்தும் நவராத்திரியைக் கொண்டாடலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



