பிக் பாஸ் 8: நைசாக தீபக்கை சிக்க வைக்கப் பார்த்த தர்ஷா குப்தா கேள்வி.. ஆனாலும் மனுஷன் சொன்ன பதில் வேற லெவல்..

By Ajith V

Published:

Dharsha Gupta and Deepak : பிக் பாஸ் சீசன் இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் Vs ஆண்கள் என மாறி மாறி பல டாஸ்க்குகளில் ஜாலியாகவோ அல்லது சீரியஸாகவோ கூட சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய பகுதியை இந்த முறை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கொண்டு வந்ததால் அது பல இடங்களில் சுவாரஸ்யத்தை தான் ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் இன்னொரு பக்கம் ஒவ்வொரு வாரமும் இரு அணிகளிலும் இருந்தும் ஒரு போட்டியாளர்கள் வெவ்வேறு அணியில் மாறிக்கொள்ள வேண்டும் என்று தெரிகிறது. உதாரணத்திற்கு இந்த வாரம் பெண்கள் அணியில் இருந்து தர்ஷா குப்தா ஆண்கள் அணியுடன் இணைந்து அனைத்து டாஸ்க்கிலும் விளையாடி இருந்தார்.

அதே போல ஆண்கள் அணியில் இருந்து தீபக் பெண்கள் அணியில் இணைந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி இருந்தார். ஒருவர் இணையும் போது நிச்சயம் அந்த அணிக்குள் பல சர்ச்சைகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனை தனக்கு கிடைத்த வாய்ப்பு மூலம் ஆண்கள் அணியில் பிளவு ஏற்படுத்தி மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் தர்ஷா குப்தா.

இவரது சில செயல்பாடுகளால் ஆண்கள் அணியில் பலரும் பிரிந்திருந்த நிலையில் அர்னவ், தர்ஷா குப்தாவுக்கு சாதகமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இன்னொரு பக்கம் ஆண்கள் அணியை வேண்டுமென்றே குற்றம் கூற வேண்டும் என தர்ஷா மேற்கொண்ட சில நாடகங்களும் அம்பலமாகி இருந்தது.

இதற்கு மத்தியில் தர்ஷாவின் சமையல் பெரிய அளவில் அங்கிருந்து அனைவரையும் கடுப்பேத்த அவர் குக் வித் கோமாளில் உண்மையில் போட்டியாளராக கலந்து கொண்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு ஒரு சாப்பாட்டில் என்ன சேர்ப்பது என்று தெரியாமல் தர்ஷா குப்தா ஏதோ விளையாட்டுக்கு சமைப்பது போல் இருப்பதாகவும் போட்டியாளர்களின் புகாராக இருந்தது.

இப்படி தர்ஷா ஆண்கள் அணியில் இணைந்த பின்னர் பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்க சமீபத்தில் அவர் தீபக்கிடம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக கேட்பது போல் தீபக்கின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றே ஒரு விஷமத்தனமான கேள்வியை தர்ஷா குப்தா முன்வைக்கிறார்.

உங்களுக்கு பாய்ஸ் டீம் பிடிச்சிருக்கா, இல்ல கேர்ள்ஸ் டீம் புடிச்சிருக்கா?” என தீபக்கிடம் தர்ஷா குப்தா கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் தீபக், “நான் இங்க யாரை புடிச்சிருக்குன்னு விளையாட வரல. நான் இங்க கேம் ஆட வந்திருக்கேன். ஆண்கள் அணியில இருக்குற நான் இப்ப பெண்கள் அணியில் கேம் ஆட வந்திருக்கேன். அவ்ளோ தான். இந்த கேமை அப்படி தான் நான் பார்க்குறேன்என தெரிவிக்கிறார்.

தீபக் இந்த கேள்விக்கு கொஞ்சம் பிசிறு விட்டு பதில் சொல்லி இருந்தால் கூட நிச்சயம் அது பெரிய கண்டெண்டாக மாறுவதற்கு வாய்ப்புகள் உருவாகி இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.