இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்

By John A

Published:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் விக்கிரவாண்டியில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநாட்டுக் குழுவினை அண்மையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமித்தார். இதில் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் மாநாட்டுக்கான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் இன்று அரசியல் பயிலரங்கமும், மாநாட்டுக்கான நெறிமுறைகள் குறித்த கூட்டமும் நடைபெற்றது. இதில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது, “முதலில் அப்பா அம்மா காலில் மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். வேறு யார் காலிலும் விழ வேண்டாம் என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறுகிறேன். இன்று இந்த அரசியல் பயிலரங்கத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் வழியில் நிறைய பிளக்ஸ் பேனர்களைப் பார்த்தேன். அதில் நிரந்தர பொதுச் செயலாளர் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அது நிரந்தரமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது விஜய் மட்டுமே. எப்பவுமே தளபதியின் தொண்டன் தான்.

சேது பட ரிலீஸ்-க்கு பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? கருணாஸை பாலா அறிமுகப்படுத்திய சீக்ரெட்..

பொதுச் செயலாளர் பதவி சட்டமன்ற உறுப்பினர் பதவி போல எப்போது வேண்டுமானாலும் வரும் போகும். ஆனால் தவெக-வின் நிரந்தர தொண்டன் பதவிதான் எப்போதும் இருக்கும். பொதுச் செயலாளர் என்பது வெறும் பெயர் மட்டுமே. எனக்கு எந்த பாதுகாப்பும் வேண்டாம். நான் எப்போதும் உங்களில் ஒருவனாக தளபதியின் ரசிகனாக இருக்க ஆசைப்படுகிறேன். இனிமேல் இதுபோன்று தயவு செய்து எதுவும் செய்யாதீர்கள்.

என்னை எப்போதும் மிகைப் படுத்தாதீர்கள். இந்த பயிலரங்கம் என்பது நாம் அரசியலுக்கு வந்துவிட்டோம். இவர்களுக்கு என்ன தெரியும் என்பதை நம்மைப் பார்த்துதான் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய மூச்சே தளபதி தான். நம்முடைய முகவரியும் தளபதிதான்.“ இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநாடு நடைபெறும் இடத்தில் நடைபெற்று வரும் பணிகளை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார்.