பிக் பாஸ் 8: மாட்டிக்கிட்டே பங்கு.. வீட்டிற்குள் ஜாக்குலின் போட்ட நாடகம்.. வெச்சு செய்யும் ரசிகர்கள்..

By Ajith V

Published:

நடப்பு பிக்பாஸ் சீசனில் முதல் எலிமினேஷனாக வெளியேற்றப்பட்ட சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக நுழைந்துள்ள நிலையில், அவர் இத்தனை நாள் கவனித்த போட்டிகளை பற்றி அனைவரிடமும் தனது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பகிர்ந்து வருகிறார். இதனால் ஒரு பார்வையாளராக சாச்சனா உணர்ந்த விஷயங்களை கருத்தில் கொண்டு போட்டியாளர்களும் அதற்கேற்ப தங்களின் விளையாட்டில் இருக்கும் விஷயங்களை மாற்றம் செய்தும் வருகின்றனர்.

மேலும் கடந்த ஏழு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த முறை பெண்கள், ஆண்கள் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணி ஒரு குழுவாக இணைந்து பெண்கள் அணிக்கு எதிரான திட்டங்களை தீட்டி வருகிறது. இன்னொரு பக்கம் பெண்கள் அணியும் அதே போல ஆண்கள் அணிக்கு எதிரான திட்டங்களை தீட்டி தங்கள் பக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் ஆண்கள் அணியில் சில பேர் ஒற்றுமையாக இருந்தாலும் கூட பெண்கள் அணியில் சண்டை அதிகமாக தான் இருந்து வருகிறது. இதனை காணும் மக்கள் பலரும் ஆண்களைப் போல பெண்களும் ஒரு குழுவாக இணைந்திருந்தால் நிச்சயம் அவர்கள் இந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதும் விமர்சனமாக உள்ளது.

தற்போது சாச்சனாவும் தனது அபிப்பிராயத்தை ஒரு பார்வையாளராக கொடுத்துள்ளதால் நிச்சயம் பல மாற்றங்கள் வரும் நாட்களில் நடைபெறும் என்றே தெரிகிறது. இதற்கு மத்தியில் தான், ரஞ்சித் மற்றும் ஃபேட்மேன் ரவீந்தர் ஆகிய இருவரும் வேண்டுமென்றே விளையாட்டுக்கு சண்டை போட்டு அடிப்பதற்கு பாய்ந்த சம்பவங்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பெண்கள் அணிக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்பதால் அவர்கள் மிக சீரியஸாக இதனை எடுத்துக் கொண்டனர். அதிலும் ஜாக்குலின், சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் கண்ணீர் விடத் தொடங்கியதுடன் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோரை சமாதானம் செய்யும் முயற்சிகளில் இறங்கி வந்தனர். இதன் பின்னர் தான் இது ஒரு பிராங்க் என்பதும் தெரியவந்தது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் இந்த சண்டை குறித்து ரவீந்தர், பவித்ரா, ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் ஜாக்குலின், “ரவீந்தராவது கோபத்தில் கத்தியது பார்ப்பதற்கு நிஜமாக இருந்தது. ஆனால் ரஞ்சித் அவர்கள் சண்டை போட்டது செயற்கையாகவே தோன்றியது. இதனால் அப்போதே எனக்கு தெரிந்து விட்டது” என கூறுகிறார்.

இந்த கருத்தை கவனித்த பார்வையாளர்கள் ரஞ்சித் செய்வது நடிப்பு என தெரிந்திருந்தால் ஏன் அந்த சண்டையை நினைத்து கண்ணீர் விட வேண்டும் என்றும் மிக சீரியஸாக அந்த விஷயத்தை எடுத்து ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும் என ஜாக்குலினின் கேமை கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.