வயநாடு நிலச்சரிவு.. 9 பேரை பறிகொடுத்த பெண்.. துணையாக இருந்த வருங்கால கணவனுக்கும் ஒரே மாதத்தில் நடந்த துயரம்..

Published:

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மலைப்பிரதேசத்தில் நிறைய வீடுகள் இருக்கும் நிலையில் இங்கே அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆயிரக்கணக்கான வீடுகளும் இந்த நிலச்சரிவின் காரணமாக மண்ணுக்கு அடியில் புதைந்து போக மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். 200க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்து போக, பலரது உடலும் கிடைக்காமல் அந்த சமயத்தில் உறவினர்கள் தேடி வந்தது, இன்னும் மனதை நொறுங்க வைத்திருந்தது.

அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த பந்தங்களையும், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இழந்து தனிமரமாகவும் நின்றனர். அந்த வகையில், மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் ஸ்ருதி என்ற பெண்மணி தனது குடும்பத்தில் உள்ள 9 பேரை வயநாடு நிலச்சரிவில் இழந்திருந்தது பலரையும் கண்ணீர் மல்க வைத்திருந்தது.

வெள்ளார்மல அரசு பள்ளிக்கு அருகே சிவண்ணன் என்பவரின் குடும்பம் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் மொத்தம் 10 பேர் இருந்த நிலையில் சிவண்ணனின் மூத்த மகளான சுருதியைத் தவிர மற்ற ஒன்பது பேருமே இந்த நிலச்சரிவில் உயிரிழந்தனர்.

தாய், தந்தை, சகோதரி, தாத்தா, பாட்டி என மொத்தம் ஒன்பது பேரை இழந்து நின்று சுருதி, குடும்பத்தினரின் உடல்களை பார்த்து கண்ணீர் வடித்திருந்தது அந்த சமயத்தில் பலரையும் மனம் நெருட வைத்திருந்தது. இது தொடர்பான வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் சுருதிக்கு நேர்ந்த மற்றொரு துயரம் மீண்டும் அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. நிலச்சரிவுக்கு முன்பாக வரும் டிசம்பர் மாதம் சுருதியின் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக சேர்த்து வைக்கப்பட்ட நகைகள், பணம் என அனைத்துமே இந்த நிலச்சரிவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த சுருதிக்கு அவரது காதலனும், வருங்கால கணவருமான ஜென்சன் மட்டும் தான் ஒரே ஆதரவாக இருந்து வந்தார்.

ஒன்பது பேரை இழந்தாலும் தனது வருங்கால கணவர் நிச்சயம் தன்னை நன்றாக பார்த்து துயரிலிருந்து மீட்டு விடுவார் என சுருதியும் எதிர்பார்த்து வந்த நிலையில் தான், சமீபத்தில் ஒரு விபத்தில் ஜென்சன் உயிரிழந்துள்ளார். தனது தோழிகள் மற்றும் ஜென்சன் ஆகியோருடன் ஸ்ருதி சமீபத்தில் வேன் ஒன்றில் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த வேனை ஜங்ஷன் ஓட்டி வந்த நிலையில் எதிர்பாராதமாக அதன் மீது தனியார் பஸ் ஒன்று மோதி உள்ளது. அந்த வேனும் கடுமையாக சேதம் அடைய, இதில் பயணம் மேற்கொண்ட அனைவரும் படுகாயம் அடைந்தனர். அதில் சுருதி உள்ளிட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஜென்சன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, தனது வருங்கால கணவரின் மரணம் குறித்து இன்னும் சுருதிக்கு எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என்றும் சோகமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் உங்களுக்காக...