மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகிய வாழை திரைப்படம் பல்வேறு இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தின் பிரிவியூ காட்சியைப் பார்த்த திரைப் பிரபலங்கள் வாழை திரைப்படத்தைக் உச்சி நுகர்ந்து கொண்டாடித் தீர்த்து விட்டனர். அதே சமயத்தில் மாரி செல்வராஜ் மீது விழுந்த விமர்சனங்களுக்கும் பஞ்சமே இல்லை. எனினும் வாழை திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை.
கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாழை திரைப்படம் ஒரு அரசியல் பேசு பொருளாகவே மாறியிருக்கிறது. இந்நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வாழை திரைப்படத்தினைப் பார்த்து ரசித்திருக்கிறார்.
வாழை திரைப்படம் பார்த்து எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களைப் பதிவிட்டிருக்கிறார் முதலமைச்சர். அதில், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான வாழை திரைப்படத்தினைப் பார்த்தேன். பசியுடன் சிவனைந்தன் தவித்த போது ஆயிரம் வாழைத் தார்களை நமது இதயத்தில் ஏற்றி விட்டார் மாரி.
பசிக் கொடுமையை எந்தச் சிவனைந்தனும் எதிர்கொள்ளக் கூடாது என காலை உணவுத் திட்டம் உருவாக்கியது மகிழ்ச்சி. காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டானின் தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.
முன்னதாக அமெரிக்காவில் கூகுள், மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உரையாற்றினார். மேலும பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 1800 கோடி வரையிலான முதலீடுகளை ஈர்த்திருக்கிறார்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
