கடன் பிரச்சனை தீர வேண்டுமா? அப்படின்னா இதுதான் உங்களுக்கான வழிபாடு!

By Sankar Velu

Published:

ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய வழிபாடு என்னென்ன என்று பார்ப்போம்.

பொதுவாக செவ்வாய்க்கிழமை என்று சொன்னாலே அந்த நாளில் எதுவும் ஆரம்பிக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால் செவ்வாய் அப்படி கிடையாது. சில விஷயங்களை செய்வதற்கு மிக மிக அற்புதமான நாள் அதுதான்.

மங்களகரமான நாளில் அம்பிகையை வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். (23.07.2024) அன்று ஆடி மாத முதல் செவ்வாய் அமைந்துள்ளது. நாளை வருகிறது. அன்று கடன் தீர என்னென்ன வழிபாடு செய்யலாம் என்று பார்க்கலாம். 2வது செவ்வாய் ஆடி கிருத்திகை அன்று வருகிறது. 3வது செவ்வாய்க்கிழமை 6.8.2024 அன்று வருகிறது. நோய் நீங்கவும், காரிய சித்தி பெறவும் ஆஞ்சநேயருடைய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

13.08.2024 அன்று கடைசி செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்று அம்பிகைக்கு மாவிளக்கு வழிபாடும், குங்கும அர்ச்சனையும் செய்ய வேண்டும்.

நாளை (23.07.2024) முதல் செவ்வாய்க்கிழமை வருகிறது. கடன் என்பது யாராக இருந்தாலும் கலங்க அடிக்கும் விஷயம் தான். கடன் வாங்கினால் தூக்கமே வராது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன் கொடுத்தவங்களும் அதை வாங்குவதற்குள் கஷ்டப்படத் தான் செய்கிறார்கள்.

அதனால் கடன் வாங்குபவர்களும், கடன் கொடுத்தவர்களுமே இந்த நாளில் வழிபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் கடன் அடைத்தால் அந்தக் கடன் சீக்கிரமாக அடைந்து விடும். திங்கள் கிழமை கடன் வாங்கவும் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை கடன் கொடுக்க முடியவில்லை என்றால் இது கடனுக்குக் கொடுக்குற காசுன்னு ஒரு 100 ரூபாயாவது உண்டியலில் எடுத்துப் போடுங்க. அது சேர்ந்ததும் கடனை அடைத்து விடலாம்.

ML
ML

இந்தக் கடன் தீர மகாலெட்சுமி அருள் தான் நமக்குத் தேவை. செல்வத்தை, மனநிம்மதியை நமக்கு வாரி வழங்குபவள் மகாலெட்சுமி. பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதனால் மகாலெட்சுமி அனுக்கிரகம் பண்ண வேண்டும். அதனால் அவரது அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத்தர செவ்வாய்க்கிழமை வழிபாடு மிக முக்கியமானது.

ஆதிசக்தியாக விளங்கக்கூடிய அன்னைக்குள் மகாலெட்சுமியும் இருக்கிறாள். சரஸ்வதி தேவியும் இருக்கிறாள். அதனால் வீட்டில் உள்ள அம்பிகையை பால், கல்கண்டு சாதம் என ஏதாவது ஒரு நைவேத்தியத்தை வைத்து கடன் தீர படிக்க வேண்டிய பதிகங்களைப் படித்து வழிபடலாம். காக்கை, எறும்பு ஆகியவற்றுக்குத் தானம் வைக்கலாம்.

மகாலெட்சுமிக்குரிய கனகதாரா ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம். கடன் அடைக்க வேண்டியவர்களுக்கும், கடன் வர வேண்டியிருக்கு என்பவர்களும் இப்படி வழிபடலாம்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.