ரஜினி, கமல் இடத்தை சத்யராஜால் பிடிக்க முடியவில்லையே… ஏன்? இதுதான் காரணமா?

By Sankar Velu

Published:

நடிகர் சத்யராஜை தமிழ்த்திரை உலகில் ‘புரட்சித்தமிழன்’ என்று அழைப்பர். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர் சினிமா மோகத்தால் நடிக்க வந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான அவர் பல படங்களில் அவரைப் போல மேனரிசங்கள் காட்டி நடிப்பது ரசிக்க வைக்கும்.

எம்ஜிஆர் ‘ரிக்ஷாக்காரன்’ல நடித்தார் என்றால் இவர் ரிக்ஷா மாமாவில் நடித்தார். எம்ஜிஆர் மாட்டுக்கார வேலனில் நடித்தார் என்றால் இவர் ‘வண்டிச்சோலை சின்ராசு’வில் நடித்தார்.

எம்ஜிஆர் புதுமைப்பித்தனில் நடித்தார் என்றால் இவர் ‘புதுமனிதன்’ படத்தில் நடித்தார். இருவருடைய படங்களுமே பார்ப்பதற்கு போரடிக்காமல் செல்லும். ஆனால் சத்யராஜின் படங்களில் நக்கல், நய்யாண்டி, லொள்ளு எல்லாம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இவர் 80களில் சினிமாவுக்குள் நுழையும்போது வில்லனாகத் தான் வந்தார். கமல், ரஜினி படங்களிலும் வில்லனாக வந்து அசத்தினார். அதன்பிறகு மெல்ல ஹீரோவானார்.

Valter vetrivel
Valter vetrivel

அது அவருக்கு செட் ஆகி விட்டது. அதன்பிறகு நீண்ட நாள்களாக ஹீரோவாகத் தாக்குப் பிடிக்க முடியாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய படங்கள் ‘ஏ’ சென்டரில் மட்டும் ஓடவில்லை என்று ஒரு கருத்து இருந்தது. இவருக்கு ‘பி’ சென்டர்ல தான் அமோக வரவேற்பு.

இவராவது பரவாயில்லை. சிவக்குமார் எத்தனையோ படங்களில் நடித்தார். ஆனாலும் ‘ஏ’ சென்டர் பக்கம் நெருங்க முடியவில்லை. அதனால் நட்சத்திர அந்தஸ்தைப் பெற முடியவில்லை. ரஜினி, கமல், மைக் மோகன் மட்டுமே ஏ சென்டரில் இடம்பிடித்தார்கள்.

சத்யராஜ் ‘பி’ சென்டர். பிரபுவும், விஜயகாந்தும் கூட ஒரு கால கட்டம் வரை ‘ஏ’ சென்டரில் இடம்பெற முடியாமல் திணறினர். அதன்பிறகு 90களின் நடுப்பகுதியில் தான் விஜயகாந்தே ஏ சென்டர் மக்கள் மத்தியில் பிரபலமானார். பாக்கியராஜ் தனக்கென தனி சென்டரை உருவாக்கி வைத்து இருந்தார்.

சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் ரஜினி, கமல் இருவரும் இடம்பிடித்தனர். பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், கரூர் பகுதிகளில் சத்யராஜ் இடம்பிடித்தார். மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் விஜயகாந்த் இடம் பிடித்தார். ராமராஜன் ‘சி’ சென்டரின் முடிசூடா மன்னனாக இருந்தார். இளையராஜா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் ஆல் சென்டர்களிலும் ரவுண்டு கட்டி அடித்தனர்.

சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் ரஜினி, கமல் ஆகியோரது படங்கள் சக்கை போடு போடும். அதனால் அவர்களுக்குத் தான் சினிமாவில் மார்க்கெட். சத்யராஜிக்கு கரூர், குன்னூர், திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் மட்டுமே ரசிகர் மன்றங்கள் இருந்தன. சென்னையில் ரசிகர்கள் குறைவு தான்.

வால்டர் வெற்றிவேல் படத்திற்குப் பிறகு தான் அவருக்கு ‘ஏ’ சென்டர் ரசிகர்களும் கிடைத்தனர். ஆனால் இன்று வரை ரஜினி, கமலுடன் இருந்தே பயணித்த சமகால நடிகர்களில் சத்யராஜ் மட்டும் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.