ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரைப்படங்களில் விஜயகாந்த்.. பிரேமலதாவின் அதிரடி அறிவிப்பு..!

By Bala Siva

Published:

ஏஐ டெக்னாலஜி மூலம் மறைந்த திரையுலக பிரபலங்களை திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோர்களின் குரல் ’லால் சலாம்’ படத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதும் விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் கூட பவதாரணி குரல் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிந்தது.

அந்த வகையில் விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் சில காட்சிகளில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி வருவதாகவும் அதற்கு பிரேமலதாவிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்திலும் விஜயகாந்த் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது வேறு வகையில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்த தகவல் இது வரை இல்லை.

இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை சில திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதாக தனது செய்திகள் வெளியாகி உள்ளன என்றும் முன் அனுமதி இல்லாமல் கேப்டன் விஜயகாந்த்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.