சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி

By Keerthana

Published:

சென்னை: சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம் செய்த கல்லுரி மாணவி இரவில் காதலனை வீட்டிற்கே அழைத்து கல்யாணம் செய்துள்ளார். அதன்பின்னர காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் போலீசிடமே மிக தைரியமாக பேசி சம்மதிக்க வைத்ததுதான் ஹைலைட். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த கே.கே.நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞரை காதலித்து வந்தார். ஆனால் கல்லூரி மாணவியின் காதலை அவரின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர்.

இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் நேற்று முன்தினம் மாலை கே.கே.நகரில் உள்ள மாணவியின் வீட்டில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அப்போது, அந்த மாணவி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு தனக்கு அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளையுடன் மாலையும் மாற்றிக்கொண்டார். தொடர்ந்து அவருடன் நிச்சயதார்த்த புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு இரவு விருந்து நிகழ்ச்சியும் நடந்தது.

அப்போது கல்லூரி மாணவி திடீரென தனது காதலனுடன் செல்போனில் பேசி அவரை இரவில் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். காதலனும் தனது நண்பர்கள் 5 பேரோடு கல்லூரி மாணவியின் வீட்டிற்கு வந்தார். அப்போது காதலனை எல்லாரிடமும் சத்தமாக பேசி அறிமுகம் செய்த மாணவி, ‘எனக்கு இவர் தான் கணவன். நான் அவரோடு தான் போகப்போகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப்பாருங்கள்’ என்று ஆவேசமாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ந்து நின்ற உறவினர்கள் மத்தியில் காதலனுடன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது தடுத்த உறவினர்களை காதலுடன் வந்த நண்பர்கள் கத்தியை காட்டி மிரட்டி தாக்கினார்கள். இந்த சண்டைகளுக்கு நடுவில் தனது காதலனோடு அந்த இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் தரப்பில் சென்னை கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரணியன் விசாரித்தார்.

இதையடுத்து திருமணம் செய்த மாணவி காதல் கணவனோடு கே கே நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது மாணவி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் பேசும் போது, நேற்று இரவே எனது காதலனை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு 21 வயதாகிறது என்பதால் சட்டப்படி நான் மேஜர். எனவே என் திருமணத்தை ஏற்றுக்கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள் என்றார்.. இதை கேட்டுதிடுக்கிட்ட இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட போலீசார் மாணவியை வேறு வழியில்லாமல் வாழ்த்தினர்.

தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசினார்கள். இறுதியில் பெற்றோர்களும், மாணவியின் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். துணிச்சலாக வீட்டை விட்டு வெளியேறி காதலனை கைப்பிடித்த மாணவிக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.