சிவாஜியிடம் பாடுவதற்காக கண்டிஷன் போட்ட டி.எம்.எஸ் : இப்படித்தான் கூட்டணி உருவாச்சா?

By John A

Published:

பழங்கால திரைப்படங்களில் கதாநாயகர்களே திரையிலும் பாடித்தான் நடிக்கவேண்டும் என்ற தகுதி இருக்க எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் அந்த முறை உடைக்கப்பட்டது. பின்னணிப் பாடகர்கள் பலர் உருவெடுத்தனர். அவற்றில் என்றுமே நினைவை விட்டு நீங்காத லெஜன்ட் பாடகர்களில் ஒருவர் டி.எம். சௌந்தரராஜன்.

மதுரையில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்த டி.எம்.எஸ் ஆரம்பத்தில் தியாகராஜ பாகவதர்மேல் பற்றுக் கொண்டு அவருடைய பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ளார். பின்னர் 1950-ல் வெளியான கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் ராதே நீ என்னை விட்டுப் போகாதடி என்ற பாடலை சினிமாவிற்காக முதன்முதலில் பின்னணி பாடினார் டி.எம்.எஸ்.

முன்னணி பாடகராக மாறுவதற்கு முன்பு நிறைய சின்னச் சின்ன வேலைகளை செய்த டிஎம்எஸ் சிவாஜிக்காக பாடும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள எண்ணிய போது, டி.எம் எஸ் அவர்களுக்கு உறுதுணையாக நின்றார் இசையமைப்பாளர் ஜி.இராமதாதன்.

பராசக்தியில் சிவாஜிக்காக பாடிய சி. எஸ். ஜெயராமன் தான் தூக்குக் தூக்கியிலும் பாடவேண்டும் என்று கூறினார் சிவாஜி. பராசக்திக்கு பிறகு மனோகரா, அந்த நாள் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ஆளுமையை உருவாக்கியிருந்தார் சிவாஜி. அதனால் அவர் கூறியதை கேட்டு குழப்பத்தில் இருந்த டிஎம்எஸ் ஒரு வழி சொன்னார் .

“நான் மூன்று பாடல்களை பாடுகிறேன். பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்கிறேன்” என்றார். சரி என்றார் சிவாஜி . சிவாஜியின் சம்மதத்துக்காக முதலில் மூன்று பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. மூன்றையும் கேட்ட சிவாஜி, டிஎம்எஸ் இந்த அளவுக்கு பாடுவார் என எதிர்பார்க்க வில்லை .எனவே சம்மதம் தெரிவித்தார். அன்று ஆரம்பித்தது சிவாஜி- டிஎம்எஸ் கூட்டணி.

மெரினாவுக்கு முன்பே சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க முயற்சித்த இயக்குனர்!! யார் இந்த செம்புலி ஜெகன்?

அதன்பிறகு எம்.ஜி.ஆருக்காக மலைக்கள்ளன் படத்தில் வரும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “, பாடலை கேட்டவுடன், தமிழக ரசிகர்கள் அவரை முழு உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள். அதுதான் எம். ஜி .ஆர்.- டி எம் எஸ் கூட்டணிக்கு தொடக்கமாக அமைந்தது. எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்துக்கும் முயற்சிகளுக்கும் இந்தப் பாடல் முக்கியமாக அமைந்தது.

முதலில் நல்ல வாய்ப்புகளுக்காக தடுமாறிய டிஎம்எஸ் மலைக்கள்ளன் படத்தில் பாடிய பிறகு மெல்ல மெல்ல நட்சத்திரப் பாடகராக மாறினார். எம்.ஜி.ஆர். , சிவாஜி இருவருக்கும் தனித்தனி குரல்களில் கொஞ்சம் கூட ஸ்ருதி மாறாமல் பாடி காலத்தால் அழியாத பல ஹிட் பாடல்களைப் பாடினார் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்.