அரங்கேற்றம்: ஆச்சாரியமான குடும்பத்தில் பிறந்து வழிதவறிய கேரக்டர்.. கத்தியின்றி செய்த பாலசந்தரின் யுத்தம்..!

By Bala Siva

Published:

ஆச்சாரியமான குடும்பத்தில் பிறந்து தனது குடும்பத்திற்காக வழி தவறி அதன் பிறகு தனது குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டு பைத்தியமாக மாறும் ஒரு பரிதாபமான கேரக்டர் தான் அரங்கேற்றம் படத்தின் நாயகி பிரமிளா கேரக்டர். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்போது மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

ஒரு கிராமத்தில் ஆச்சாரியமான குடும்பம். வதவத என குழந்தைகள், ஆனால் அந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத அளவுக்கு வறுமை. வறுமையாக இருந்தாலும் அந்த குடும்ப தலைவர் எஸ்.வி.சுப்பையா தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர். குழந்தைகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, ஆனால் தனது கௌரவத்தை விட மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர். அவரது மனைவிதான் எம்.என்.ராஜம்.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

arangetram3 1

இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள். இந்த நிலையில் வீட்டில் வறுமை கண்ட மூத்த மகள் பிரமிளா அப்பாவிடம் போராடி வேலைக்கு செல்ல அனுமதி வாங்குவார். இதனை அடுத்து அவர் சென்னைக்கு வேலைக்காக செல்வார். அப்போது தனது மூத்த தம்பியான கமல்ஹாசன் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டதால் சிபாரிசுக்காக ஒரு பெரிய மனிதரிடம் பிரமிளா செல்வார். அப்போது அங்கு அவரால் சூறையாடப்படுவார். அதன் பிறகு கமல்ஹாசனுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும்.

இதனை அடுத்து அவர் வேறு ஒரு இடத்திற்கு வேலைக்கு செல்வார். அந்த இடத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளியால் சூறையாடப்படுவார். அதன் பிறகு தங்கையின் பாடகி ஆசையை நிறைவேற்ற ஒரு பெரிய மனிதரிடம் செல்வார், அங்கும் அவர் சூறையாடப்படுவார், ஆனால் தங்கை பாடகியாகி விடுவார்.

ஒரு கட்டத்தில் பிரமிளா விபச்சாரியாக மாறிவிடுவார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் அவர் தனது குடும்பத்திற்கு அனுப்பி வைப்பார். தம்பி கமல்ஹாசன் ஒரு பக்கம் மருத்துவம் படிக்க, மற்ற தம்பி, தங்கைகள் நன்றாக படிக்க, அப்பா, அம்மா, பாட்டி உள்பட அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, நல்ல உடை என திருப்தியான வாழ்க்கை அவர் செய்த விபச்சார தொழிலால்தான் என்பது குடும்பத்தினருக்கு தெரியாது.
இந்த நிலையில்தான் ஒரு கட்டத்தில் தங்கையின் கல்யாணத்திற்காக அவர் ஊருக்கு வருவார்.  அப்போது தனது தாயார் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைவார். இந்த நிலையில் தனது தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை  தன்னை தேடி வந்த கஸ்டமர்களில் ஒருவர் என்பது அவருக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைவார்.

arangetram1

இந்த நிலையில் பிரமிளா சென்னையில் விபச்சாரம் செய்துதான் தனது குடும்பத்தை காப்பாற்றி இருப்பார் என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஊருக்கே தெரியவரும். அதன் பின் என்ன நடந்தது? கடைசி 20 நிமிடம் பொங்கி எழுந்து பிரமிளா பேசும் வசனங்கள் என்ன? இறுதியாக பிரமிளாவின் கேரக்டருக்கு கிடைத்த பரிதாபமான முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படத்தின் டைட்டிலிலே முதலில் பிரமிளா என்று தான் போடுவார்கள். அந்த அளவுக்கு அவரது கேரக்டர் படத்திற்கு முக்கியத்துவமாக இருக்கும்.  கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிலையில் முதல் முதலாக வாலிபராக நடித்த படம். அவருக்கு இந்த படத்தில் சின்ன நெகட்டிவ் கேரக்டர் தான். பிரமிளா தங்கையாக ஜெயசித்ரா நடித்திருப்பார். அனைவரின் நடிப்பு மிக அபாரமாக இருக்கும்.

இந்த படத்தில் கே.பாலசந்தரின் வசனம் அபாரமாக இருக்கும். கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு சமூக யுத்தத்தையே அவர் தனது வசனம் மூலம் செய்திருப்பார்.

முதன்முதலில் நீச்சலுடையில் நடித்த நடிகை, 25 வயது மூத்தவருடன் திருமணம்.. யார் இந்த ஜெயந்தி?

இந்த திரைப்படம் 1973ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் கே.பாலசந்தரின் மிக அருமையான படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.