அமெரிக்காவைச் சேர்ந்த ‘க்ளூலி’ (Cluely) என்ற ஏ.ஐ. ஸ்டார்ட்அப் நிறுவனம், தனது பணியாளர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள புதிய கோணத்தில் அணுகி, பணியாளர்களுக்கு புதுமையான சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி ஒரு பணியாளர் சக பணியாளர்களுக்கு வெற்றிகரமாக டேட்டிங் ஏற்பாடு செய்து வைத்தால், ரூ.43,000 போனஸ் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
க்ளூலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுங்கின் லீ இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார். ஒரு பணியாளர், தனது சக பணியாளர் ஒருவருக்கு அவர் ஆணாக இருந்தால் பெண்ணையும், பெண்ணாக இருந்தால் ஆணையும் மகிழ்ச்சியான டேட்டிங் அனுபவத்தை உருவாக்கி தந்தால், அவருக்கு ரூ.43,000 போனஸ் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், ஒரு பணியாளர் பல ஜோடிகளுக்கு டேட்டிங் ஏற்பாடு செய்தால், ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக போனஸ் பெறலாம். அதாவது ஒவ்வொரு வெற்றிகரமான டேட்டிங்கிற்கு ரூ.43,000 கிடைக்கும். மாதத்திற்கு 4 டேட்டிங் ஏற்பாடு செய்தால் ரூ.1.5 லட்சத்திற்கு மேல் கிடைக்கும். ஏற்பாடு செய்யும் டேட்டிங் வெற்றி அடைந்தாலே போதும், அது நீண்டகால உறவாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
பணியிடத்தில் மனித உறவுகள் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள், பணியாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் மனநலனுக்கு அவசியமானது என்று ‘க்ளூலி’ நிறுவனம் நம்புகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் யோகா வகுப்புகள் அல்லது மனநல விடுமுறைகள் போன்றவற்றை அளிக்கும் நிலையில், க்ளூலி மட்டும் வித்தியாசமாக அன்பு, மகிழ்ச்சி மற்றும் பணம் ஆகியவற்றை ஒன்றாக அளிக்கிறது. பணியாளர்களை ஈடுபடுத்த வைக்கும் இந்த தனித்துவமான உத்தி, பணியிடங்கள் தனிப்பட்ட வாழ்வில் தலையிடலாமா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
க்ளூலியின் இந்த புதுமையான முயற்சி, சம்பளத்திற்கு அப்பால், பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டுவது எப்படி என்பதை மற்ற நிறுவனங்களுக்கும் உணர்த்தும் ஒரு உதாரணமாக மாறியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
