கடைசி 15 ஆண்டுகளாக, நம்முடைய மொபைல் ஃபோன்களை ஆப்-கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வேலை தேட LinkedIn, பயணத்திற்கு Uber, டேட்டிங்கிற்கு Tinder என எல்லாவற்றுக்கும் ஒரு ஆப் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான்.
முக்கிய AI நிறுவனங்கள் இப்போது வெறும் சாட்போட்களை உருவாக்குவதில்லை. அவை, ஆப்-களின் பயன்பாட்டையே மாற்றியமைக்கின்றன. சாட்ஜிபிடியை உருவாக்கிய OpenAI, ஒரு புதிய AI வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்கி வருகிறது. இந்த OpenAI வேலைவாய்ப்பு தளத்தின் நோக்கம் எளிமையானது. வேலை தேடுபவர்கள், நிறுவனங்களுக்கு தங்கள் தகுதியை மட்டும் சொன்னால் போதும், அதற்கு ஏற்ற நிறுவனங்களை இந்தத் தளம் தானாகவே பரிந்துரைக்கும்.
OpenAI-யின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்த தளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். வால்மார்ட், ஆக்சென்சர் மற்றும் பிசிஜி (போஸ்டன் கன்சல்டிங் குரூப்) போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்த தளத்தில் இணைந்துள்ளன. இதன் மூலம், பெரிய நிறுவனங்களால் மூழ்கடிக்கப்படும் சிறு வணிக நிறுவனங்களுக்கும் திறமையான ஊழியர்களை தேடும் வாய்ப்பு கிடைக்கும்.
இணையத்தில் தகவல்களை தேடும்போது நூற்றுக்கணக்கான லிங்க்குகளை வழங்கும் பிரவுசர்களின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity, “Comet” என்ற ஒரு புதிய AI பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் கேள்விகளை கேட்டால், அதுவே சரியான பதில்களை கண்டறிந்து தருகிறது. Google-ம் சும்மா இல்லை. அதன் புதிய AI முறை, தேடலின் இயல்புநிலையாக வெளிவருகிறது. இனி நீல நிற லிங்க்குகளின் பக்கங்கள் இல்லாமல், முழுமையான சுருக்கங்கள், ஒப்பீடுகள் மற்றும் கூடுதல் கேள்விகளுடன் பதில்களை பெறலாம்.
அடுத்தகட்டமாக ஆப்-களுக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை AI, ஒரு ஆப்-பில் ஒரு அம்சமாக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது AI-யே தயாரிப்பாக மாறி, ஆப்-கள் அதை வழங்குவதற்கான ஒரு வழியாக மட்டுமே செயல்படுகின்றன.
Spotify-க்கு இப்போது AI DJ உள்ளது.
Snapchat-க்கு அதன் சொந்த சாட்போட் உள்ளது.
Microsoft Office இப்போது “Co-pilot” என்று அழைக்கப்படுகிறது.
Alexa ஒரு உண்மையான ஷாப்பிங் உதவியாளராக பரிணாமம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள், 70% முக்கிய ஆப்-கள் தங்கள் அனைத்து செயல்பாடுகளுக்கும் AI-யை நம்பியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆப்-களின் சகாப்தத்தின் முடிவா? அல்லது AI யுகத்தின் தொடக்கமா? அல்லது இது முதலீட்டாளர்களையும் பயனர்களையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும் ஒரு புதிய உத்தியா? என்பது விவாதத்திற்குரியது. முன்பு, டாட்காம் (Dotcom) ஏற்றத்தின் போது, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் பெயருடன் “.com” என்று சேர்த்துக்கொண்டன. பிறகு, கிரிப்டோ காலத்தில், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு பிளாக்செயின் உத்தி இருந்தது. இப்போது AI-யின் முறை.
இந்த புதிய மாற்றங்கள் உண்மையான புரட்சிகளா அல்லது புதிய பெயர்கள் மட்டுமா? என்பதுதான் இப்போது உள்ள கேள்வி. ஆப்-கள் எல்லாவற்றையும் ஆதிக்கம் செலுத்திய காலம் முடிந்துவிட்டதாகவும், இனி எதிர்காலம் AI தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
