ஆனி முடிச்சு ஆடி பிறக்க போகுது.. டாப்பில் வந்த பத்திரப்பதிவு துறை.. தமிழக அரசுக்கே இன்ப அதிர்ச்சி

By Keerthana

Published:

சென்னை : கடந்த ஜூலை 12-ம் தேதி அன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.224 கோடி வருவாய் ஈட்டி, தமிழகஅரசின் பத்திரப்பதிவு துறை சாதனை படைத்துள்ளது. கடந்த 12-ம்தேதியன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் மற்றும் ஆடி மாதம் பிறக்கபோகிறது என்பதால் அதிகப்படியான பத்திரங்கள் பதிவானது.

தமிழ்நாட்டில் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக்கிற்கு அடுத்ததபடியாக பத்திரப்பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாளான கடந்த ஜூலை 12-ம் தேதி. ஒரேநாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டி பத்திரப்பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது. இதுதான் பத்திரப்பதிவுத்துறையின் ஒரு நாள் அதிகபட்ச வருவாய் என்கிறது அரசு.

இதுகுறித்து தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ” தமிழக அரசின் பத்திரப்பதிவு துறையில் ஆவணங்களைப் பதிவு செய்ய முன்பதிவு வில்லைகள் பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சார்பதிவாளருக்கு தினந்தோறும் 100 முன் ஆவணப்பதிவு வில்லைகள் மட்டுமே பதிவுத்துறை இணையதளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜுலை 12-ம் தேதி அன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் மற்றும் ஆடி மாதம் பிறக்க இருக்கிறது. எனவே பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ளவும் முன்பதிவு வில்லைகள் கிடைக்கவில்லை என சிரமப்படக்கூடாது என்பதற்காக ஏற்கனேவே நடைமுறையில் இருந்த ஆவணப்பதிவிற்க்கான 100 வில்லைகள் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி 12-ம்தேதியன்று 20 ஆயிரத்து 310 ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய சார்பதிவாளர்களால் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அரசுக்கு ரூ.224.26 கோடி வருவாய் ஒரே நாளில் ஈட்டப்பட்டுள்ளது” இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு என்பது பொதுவாக மூகூர்த்த நாட்களில் செய்வதையே மக்கள் விரும்புகிறார்கள் . முதல் முதலாக வாங்கும் சொத்துக்களை நல்ல நாளில் பதியவே மக்கள் விரும்புகிறார்கள். அரசு அவர்களுக்காக சுபமுகூர்த்த நாள், சனி அல்லது ஞாயிறுகளில் வந்தாலும் சரி, அல்லது தைபூசம், ஆடி பெருக்கு உள்பட எந்த ஒரு விஷேசமான நாட்களாக இருந்தாலும் சரி பத்திரப்பதிவு அலுவலகத்தினை திறக்கிறது. மக்கள் அதிகம் விரும்பும் எல்லா வளற்பிறை சுபமூகூர்த்த நாட்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக பத்திரப்பதிவு துறை வருவாய் அதிக அளவில் கிடைக்கிறது. பொதுமக்களுடன் மகிழ்ச்சியுடன் தங்களுக்கு பிடித்த நாளில் சொத்துக்களை வாங்குகிறார்கள்.