தமிழக அரசியலில் ஒரு நடிகராக சிகரம் தொட்ட விஜய், தற்போது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் மூலம் அரசியல் களத்தில் இறங்கியிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியலுக்கு வந்த வேகத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும், அனுபவம் வாய்ந்த அரசியல் விமர்சகர்கள் அவர் மீது பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, திரையில் தோன்றி ஐந்து நிமிடங்களில் ஊழலையும் அரசாங்கத்தையும் சரிசெய்யும் ‘சினிமாத்தனமான’ அரசியல், நிஜ வாழ்க்கையில் செல்லுபடியாகாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சினிமாவில் அஞ்சு நிமிஷத்துல சிஸ்டத்த மாத்தலாம், ஆனா நிஜத்துல அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டாலும் ஒரு செங்கல்லை கூட மாத்த முடியாது என்று விமர்சகர்கள் விஜய்க்கு ஒரு எதார்த்தமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு கட்டுக்கோப்பான அறைக்குள்ளேயே நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. மக்கள் பிரச்சனை என்று வரும்போது நேரடியாக களத்திற்கு சென்று போராடாமல், அறிக்கை விடுவதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அவர் நினைப்பதாக விமர்சிக்கப்படுகிறது. மக்கள்கிட்ட போகாம வீட்டுக்குள்ள உட்கார்ந்து அரசியல் பண்ணுறதுக்கு பேரு முதிர்ச்சி இல்ல, அதுக்கு பேரு வெறும் முயற்சி தான் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒரு தலைவன் என்பவன் மக்கள் படும் துயரங்களை தட்டில் வைத்து பார்க்காமல், களத்தில் அவர்களோடு நின்று போராடினால் மட்டுமே மக்களின் உண்மையான நம்பிக்கையை பெற முடியும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.
தமிழக அரசியலில் திராவிட கட்சிகள் பல ஆண்டுகளாக வேரூன்றி இருக்கும் நிலையில், எந்தவொரு பின்புலமும் கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருப்பது மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. சினிமாவில் வேணா நீங்க சிங்கிளா வரலாம், ஆனா அரசியல்ல தனி மரமா நின்னா அதுக்கு பேரு வெற்றி இல்ல, வெறும் ஏமாற்றம் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வாக்கு வங்கி என்பது வெறும் கைத்தட்டல்களால் உருவாவது அல்ல; அது பல ஆண்டுகால உழைப்பு மற்றும் கூட்டணி பலத்தால் கட்டமைக்கப்படுவது என்பதை விஜய் உணர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற தேசிய ஊடக சந்திப்பு மற்றும் கரூரில் நடந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் சென்னைக்கு வரவழைத்த விவகாரம் போன்றவற்றை விமர்சகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அரசியல் என்பது வெறும் பிம்பத்தை கட்டமைப்பதல்ல, அது மக்களுடன் இரண்டற கலப்பது. ராகுல் காந்தி போன்ற தேசிய தலைவர்களே பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கும்போது, விஜய் இன்னும் ஒரு பாதுகாப்பான இடைவெளியை தற்காத்து வருவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பின்னடைவை தரும் என்று கருதப்படுகிறது. மற்ற கட்சிகளுடன் கைக்கோர்க்க மாட்டேன் என்ற அவரது பிடிவாதம், ஒருவேளை வாக்குகளை பிரித்து மற்றவர்களின் வெற்றிக்கு மட்டுமே வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
மேலும், விஜய்யின் அரசியல் கொள்கைகள் இன்னும் தெளிவற்ற நிலையில் இருப்பதாகவும், அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை முன்னுதாரணமாக காட்டுவது வெறும் ஓட்டு அரசியல் மட்டுமே என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஒரு மாற்றத்தை விரும்பும் மக்கள், பழைய தலைவர்களின் பிம்பத்தை விட புதிய திட்டங்களையும், தீர்வுகளையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் விஜய் இன்னும் தனது மௌனத்தை முழுமையாக கலைக்காமல், மர்மமான ஒரு அரசியல்வாதியாகவே தன்னை முன்னிறுத்துவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். அரசியல் மேடையில் வசனம் பேசுவது எளிது, ஆனால் அந்த வசனங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக திறன் விஜய்யிடம் இருக்கிறதா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இறுதியாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது விஜய்க்கு ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக அமையப்போகிறது. வெறும் திரையுலக புகழை மட்டும் வைத்துக்கொண்டு கோட்டையை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணம் தற்கொலைக்குச் சமமானது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, அடிமட்ட தொண்டர்களுடனும் மக்களுடனும் நெருங்கி பழகினால் மட்டுமே தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லையெனில், சினிமாவில் மின்னிய ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பல நட்சத்திரங்களை போலவே அரசியலில் வெறும் ஒரு தற்காலிக பயணியாக மறைந்து போகும் சூழல் உருவாகும் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களது கசப்பான உண்மைகளை தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
