கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்

Published:

சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலளார் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் , என். மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.

அதனை பரிசீலித்து அடையாள அட்டைகளை வழங்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்த அரசு தரப்பு, அடையாள அட்டைகள் வழங்கிய பின்னர் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியது.

இதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எங்களுக்கு அறிக்கை வேண்டாம் எனவும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை தான் வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு மூன்று மாதங்கள் என கேள்வி எழுப்பினார்கள்.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தனது வாதத்தில் சாலை வசதிகள், பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கல்வராயன் மலைப் பகுதியில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் , தமிழக அரசு அளிக்கும் விவரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதிகள் ஆனால் அந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தான் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கல்வராயன் மலைப் பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலளார் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து , கல்வராயன் மலைப் பகுதியில் மினிப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ நாளை பிற்பகல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், ஆசிரியர்களுடன் பள்ளிகள் இயங்குவது தொடர்பாகவும் , மருத்துவர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவது தொடர்பாகவும், சாலை வசதிகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தார்கள்

மேலும் உங்களுக்காக...