வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்

By Keerthana

Published:

மதுரை: கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ,10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததால், சிறுமியை அவருடைய பெற்றோர் இழந்துள்ளனர். இதற்கு இழப்பீடு கொடுக்க நிதி இல்லையா? என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த அதிபதி என்பவருடைய 11 வயது மகள் சரண்யா. 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12.5.2014 அன்று சரண்யா வீட்டில் இருந்த போது, திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி சரண்யா பரிதாபமாக இறந்து போனார்.. அவரது இறப்புக்கு இழப்பீடாக ரூ,10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மது கிளையில் 2015-ம் ஆண்டில் சிறுமியின் தந்தை அதிபதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி, மனுதாரரின் மகள் இறப்புக்காக ரூ,5 லட்சம் வழங்க வேண்டும் என 21.8.2023 அன்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக சுவரை கட்டிக் கொடுத்தது அரசு தான். இந்த சம்பவத்துக்கும் அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு ரூ,5 லட்சம் இழப்பீட்டுத்தொகையை அரசு வழங்க வேண்டும். மேலும் அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என்றார்.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்கள். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ,10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததால், சிறுமியை அவருடைய பெற்றோர் இழந்துள்ளனர். இதற்கு இழப்பீடு கொடுக்க நிதி இல்லையா?

சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடு கொடுக்கும்படி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த மேல்முறையீட்டு மனுவை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இது வெட்கக்கேடான செயல். எதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்தீர்கள்?” என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

விசாரணை முடிவில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளருக்கு ரூ,50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதிகள். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன். தனி நீதிபதியின் உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.