ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவு

By Keerthana

Published:

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கைதானார். அப்படி கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டிருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிர்வாகியான மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை , தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். மேலும், எனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. எனது முழு பேச்சையும் கேட்காமல் எனக்கு எதிராக போலீஸார் பொய் வழக்கினை பதிவு செய்திருக்கிறார்கள்.

எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானேன். போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த போதும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். எனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் விசாரித்தார்., இந்த வழக்கில் கைதாகியுள்ள ஆன்மிகப் பேச்சாளரான மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார். .