டி20 ல ரிட்டயர்டு ஆனது இதுக்காக தானா.. ஒன்னரை வருசத்துல உச்சாணி கொம்பையே பிடிச்ச ரோஹித்.. சரித்திர சம்பவம்..

By Ajith V

Published:

முன்பெல்லாம் டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டி என எதுவாக இருந்தாலும் நிதானமாக ஆடி ரன் சேர்க்கும் ரோஹித் ஷர்மா, தேவைப்படும் நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தி பவுண்டரிகளை பறக்க விடுவார். ஆனால், கேப்டனான பின்னர் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டத்தை மட்டும் தான் கையில் எடுத்து வருகிறார்.

நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்ப்பதை விட ஆரம்பத்திலேயே ரன் சேர்ப்பதில் குறிக்கோளாகவும் இருக்கிறார். அதுவும் பவர் பிளே ஓவருக்குள் மிகப்பெரிய தாக்கத்தை தனது பேட்டிங் மூலம் ரோஹித் ஏற்படுத்துவதால் இந்திய அணியின் ரன் ரேட்டும் வேகமாக உயர்ந்து விடுகிறது. டி20 போட்டிகளில் இந்த ஆட்டத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்த ரோஹித் ஷர்மா, டி20 உலக கோப்பையை வென்ற கையோடு அதிலிருந்து ஓய்வினை அறிவித்திருந்தார்.

அவர் வயதின் காரணமாக தான் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதற்காகவே டி20 தொடரில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதற்கு காரணம் டி20 தொடர்களில் இருந்து அவர் ஓய்வினை அறிவித்து அதன் பின்னர் ஆடிய முதல் ஒருநாள் தொடரிலேயே டி20 போட்டிகளை போன்ற அதிரடி ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறார். இந்த இரண்டு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்திருந்தது. இந்தியாவில் மற்ற வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்க முடியாமல் போக தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா 47 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

அதேபோல இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கி ரன்னை வேகமாக ஏற்றி கொடுத்த ரோஹித் ஷர்மா 44 பந்துகளில் நான்கு சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்திருந்தார். இவரைத் தவிர மற்ற எந்த வீரர்களும் அதிரடியாக ஆடவே திணறிவரும் சூழலில் ஒரு நாள் போட்டியிலும் கூட டி20 ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறார் ரோஹித்.

இந்த தாக்கம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐசிசி தொடர்களிலும் பிரதிபலிக்கும் என தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ஒரு நாள் போட்டியில் முதல் பத்து ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் எடுத்த வீரர்களில் ரோஹித் ஷர்மா முதலிடத்தை படித்துள்ளார். அவர் கடந்த ஒன்றரை வருடங்களில் 53 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் டேவிட் வார்னர் 24 சிக்ஸர்களுடன் உள்ளார்.

அந்த அளவுக்கு ரோஹித் இடத்தை நெருங்குவதற்கு மற்ற வீரர்களுக்கு இன்னும் நிறைய சிக்ஸர்கள் வேண்டும் என்ற நிலையில், இலங்கை எதிரான இரண்டு ஒருநாள் போட்டியிலும் 10 ஓவர்களுக்குள் அரைச் சதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.