அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபகாலமாக இந்தியாவை பற்றி பேசி வருவது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவிற்கு நண்பராக இருந்தவர் திடீரென இந்தியாவுக்கு எதிராக வர்த்தக தடைகள், விசா கட்டுப்பாடுகள் என பல நடவடிக்கைகளை எடுத்து அதிர வைத்தார். அதன்பின் மீண்டும் யூடர்ன் அடித்த டிரம்ப், தற்போது பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என்றும், இந்தியாவுடன் அமெரிக்கா சிறப்பான உறவை கொண்டுள்ளது என்றும் புகழ்ந்து வருகிறார். திடீரென ட்ரம்ப் அவர்களின் இந்த மனமாற்றம் உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப், தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், இந்தியப் பொருட்கள் மீது வரி விதிப்போம் என்றும், ஐடி துறையில் வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்துவோம் என்றும் வெளிப்படையா அறிவித்து வந்தார். இந்த அறிவிப்புகள் இந்திய ஐடி துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் உள்நாட்டில் அவுட்சோர்சிங் செய்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தும் என்றும், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் உள்நாட்டிலேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
ஆனால் ட்ரம்ப் அவர்களின் திடீர் மனமற்றத்திற்கு பின்னால், இந்தியா மேற்கொண்ட சில முக்கிய ராஜதந்திர நகர்வுகளே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்யா மற்றும் சீனாவுடன் கலந்து கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லை பிரச்சனைகளை தீர்த்து, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. இது அமெரிக்காவிற்கு, ஆசியாவில் ஒரு புதிய வல்லரசு கூட்டணி உருவாகி வருவது குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
மேலும், பிரிக்ஸ் நாடுகள் புதிய வர்த்தக முறைகள் குறித்து விவாதித்ததும், அமெரிக்க டாலரை சாராத ஒரு நாணய முறையை உருவாக்குவது குறித்து பேசியதும் ட்ரம்ப் அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்தது. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் வர்த்தக தடைகள் இருந்தபோதிலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் என்று உறுதியாக தெரிவித்தார். இந்தத் துணிச்சலான நிலைப்பாடு, இந்தியாவின் வெளியுறவு கொள்கை சுயாதீனமானது என்பதை உலகிற்கு உணர்த்தியது.
இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் உலக அரங்கில் அதன் செல்வாக்கு, ட்ரம்ப் அவர்களின் கணக்கீடுகளை முழுமையாக மாற்றியமைத்து, இந்தியாவிடம் நட்பு பாராட்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் டிரம்ப் தனது இமேஜையும் பொருட்படுத்தாமல் இறங்கி வந்து தற்போது மோடி எனது நண்பர் என கூறியுள்ளார். மொத்தத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி ஒரு வல்லரசை தனக்கு பணிய வைத்த மோடியின் ராஜதந்திரம் குறித்து தான் உலக தலைவர்கள் தற்போது பேசி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
