தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி உடையும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக-வுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவ்வாறு காங்கிரஸ் விஜய்யுடன் கரங்கோர்த்தால், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியேறி விஜய் பக்கம் வரக்கூடும். இது திமுகவிற்கு தேர்தல் களத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகுந்த எச்சரிக்கையுடனும் பயத்துடனும் இருப்பதாக அரசியல் விமர்சகர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், தனது மகன் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே ஆகும். ஸ்டாலினுக்கு விஜய் மீது தனிப்பட்ட கோபம் இல்லையென்றாலும், தனது மகனின் அரசியல் வாழ்க்கை சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய்யின் வளர்ச்சியை தடுக்க திமுக தரப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் விஜய்யை கடுமையாக விமர்சிப்பதும், மட்டம் தட்டுவதும் இதன் ஒரு பகுதியாகும்.
விஜய்யின் தவெக கட்சிக்கு தமிழக இளைஞர்களிடையே, குறிப்பாக 25 வயதிற்கு உட்பட்டவர்களிடையே 70 சதவீதத்திற்கும் அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக மீது இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி அப்படியே விஜய் பக்கம் ஒரு ஈர்ப்பாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மற்றும் கொள்கைகள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மூன்றரை கோடி வாக்காளர்களுக்கு தனது அரசியல் வருகையை விஜய் மிக குறுகிய காலத்தில் கொண்டு சேர்த்துள்ளது திமுகவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்த எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக்கூடிய அதே தொகுதியில் விஜய் போட்டியிட்டு அவரை நேரடியாக எதிர்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கசிய தொடங்கின. அவ்வாறு ஒரு மோதல் ஏற்பட்டால், அது தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான போட்டியாக அமையும். செல்வாக்கு மற்றும் மக்களின் ஆதரவு அடிப்படையில் விஜய்க்கு இதில் கூடுதல் பலம் இருக்க வாய்ப்புள்ளது.
உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை, திமுகவில் அவர் ஒரு “சில்வர் ஸ்பூன்” வசதிகளுடன் வளர்ந்து வருவதாகவும், அவரை அடுத்த முதலமைச்சராக முன்னிறுத்தவே கட்சி முழுவதும் உதயநிதி மயமாக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. முரசொலி போன்ற இதழ்களில் 40 பக்கங்களில் 41 இடங்களில் உதயநிதியின் பெயரே இடம்பெறுமளவிற்கு அவர் விளம்பரப்படுத்தப்படுகிறார். ஆனால், வெறும் சனாதன பேச்சுகளை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு உதயநிதிக்கு ஈடாகுமா என்பது சந்தேகமே என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2026-ல் உதயநிதியை முதலமைச்சராக அமர்த்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதால், அதற்கு தடையாக இருக்கும் விஜய்யை முளையிலேயே கிள்ள திமுக பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. ஆனால், விஜய் தனது தரப்பில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை துணையாக வைத்துக்கொண்டால், அவரால் இந்த தடைகளை தாண்டி வெற்றி பெற முடியுமா?. குறிப்பாக, கரூரில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு விஜய்யிடம் ஏற்பட்டுள்ள தெளிவும், துடிப்பும் அவர் ஒரு வலுவான தலைவராக உருவெடுத்துள்ளாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இறுதியில், தமிழக இளைஞர்களின் ஆதரவு யாருக்கு என்பதுதான் இந்த அதிகாரப் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
