தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தி மையமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய நிகழ்வுகளில், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன், த.வெ.க-வில் இணைந்தது ஏற்படுத்திய தாக்கம், வழக்கமான கட்சித் தாவல் நிகழ்வுகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. அ.தி.மு.க-வில் இருந்து பத்து முக்கிய நிர்வாகிகள் தி.மு.க-விற்கு சென்றால் கூட ஏற்படாத பரபரப்பும், அரசியல் பதற்றமும் செங்கோட்டையன் ஒருவர் மட்டும் த.வெ.க-வில் இணைந்ததால் தமிழக அரசியலில் ஏற்பட்டிருப்பது, நடிகர் விஜய்யின் அரசியல் ‘பவர்’ எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக, ஒரு மூத்த அரசியல்வாதி தன் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிக்கு செல்வது என்பது, பெரும்பாலும் ஆளுங்கட்சி அல்லது பெரிய தேசிய கட்சியை நோக்கியே இருக்கும். ஆனால், செங்கோட்டையனின் நகர்வு முற்றிலும் வித்தியாசமானது. இது குறித்து பேசும் அரசியல் பார்வையாளர்கள், “யார் கட்சியை விட்டு வெளியேறுகிறார் என்பது இப்போது முக்கியமில்லை, அவர் எங்கே செல்கிறார் என்பதுதான் மிகப்பெரிய அரசியல் சிக்னலை தருகிறது,” என்று குறிப்பிட்டு, இந்த தாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றனர்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்: அ.தி.மு.க.வின் செங்கோட்டையன் பா.ஜ.க-வில் இணைந்திருந்தால், அந்த செய்தி அதிகபட்சம் ஒரு பெட்டி செய்தியாகவோ அல்லது அன்றைய அரசியல் பக்கத்தின் ஒரு பகுதியாகவோ மட்டுமே இருந்திருக்கும். இது அ.தி.மு.க-விற்கு ஒரு பின்னடைவு என்று பேசப்பட்டாலும், அது தமிழக அரசியல் அரங்கில் எந்த ஒரு பெரிய ‘பதற்றத்தையும்’ அல்லது தொடர் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்காது.
ஆனால், செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்ததால், அது கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தலைப்பு செய்தியாகவும், ஆழமான விவாத பொருளாகவும் நீடிக்கிறது. இந்த தொடர் விவாதம், விஜய்யின் தலைமையின் மீதும், அவர் முன்னெடுத்து செல்லும் மாற்று அரசியல் மீதும் மக்கள் மற்றும் பிற அரசியல்வாதிகள் வைத்துள்ள நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது.
செங்கோட்டையனின் இந்த தாவல், த.வெ.க-வை வெறும் நடிகர் ரசிகர் மன்றத்தின் தொடர்ச்சியாக பார்க்காமல், தமிழகத்தின் எதிர்கால அரசியல் மாற்று சக்தியாக பிற கட்சிகளின் மூத்த தலைவர்கள் பார்க்க தொடங்கிவிட்டதை காட்டுகிறது. ஒரு மூத்த தலைவர், தான் பெற்ற அனுபவத்தை, புதிதாக தோன்றும் ஒரு வலிமையான மாற்று சக்திக்கு அளிப்பதன் மூலம், அந்த புதிய கட்சிக்கு தனது அனுபவத்தின் மூலம் அங்கீகாரத்தையும், அதிகாரத்தின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறார். மேலும், ஈபிஎஸ் தலைமையில் அ.தி.மு.க-விற்கு எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு அனுபவ அரசியல்வாதிகள் வந்துவிட்டதையே செங்கோட்டையனின் வருகை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
செங்கோட்டையனின் இந்த நகர்வு, த.வெ.க-விற்கு மேற்கு மண்டலங்களில் உடனடியாக கள அனுபவத்தையும், தேர்தல் உத்திகளையும் அளிப்பதுடன், அ.தி.மு.க-வில் இருக்கும் மற்ற மூத்த தலைவர்களுக்கும் அடுத்த வாய்ப்பு ஒன்று இருக்கிறது என்ற ஒரு அடையாளம் காட்டியுள்ளது. இதன் விளைவாக, இனிவரும் நாட்களில் அ.தி.மு.க-வில் இருந்து மட்டுமல்லாமல், பிற கட்சிகளில் இருந்தும் முக்கிய அரசியல் ஆளுமைகள் த.வெ.க-வை நோக்கி வரலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்த தொடர் மாற்றங்களே, தமிழக அரசியலில் இந்த ஒரு கட்சித் வல் ஏன் ஒரு வார தலைப்பு செய்தியாக நீடிக்கிறது என்பதற்கான அடிப்படை காரணமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
