QR குறியீடுகள் பணம் செலுத்துவதற்காக மட்டுமே.. பெறுவதற்காக அல்ல.. ஏமாற வேண்டாம் மக்களே..!

டிஜிட்டல் உலகில், க்யூஆர் (QR) குறியீடுகள் பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளன. இருப்பினும், பெரும்பாலானோர் அறியாத ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பணம் செலுத்துவதற்காக மட்டுமே க்யூஆர் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன, பெறுவதற்காக அல்ல. இந்த அடிப்படை விதி…

qr

டிஜிட்டல் உலகில், க்யூஆர் (QR) குறியீடுகள் பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளன. இருப்பினும், பெரும்பாலானோர் அறியாத ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், பணம் செலுத்துவதற்காக மட்டுமே க்யூஆர் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன, பெறுவதற்காக அல்ல. இந்த அடிப்படை விதி தெரியாததால், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

பணம் செலுத்தும் முறையின் செயல்பாடு

கடைகளில் அல்லது வணிக நிறுவனங்களில் உள்ள க்யூஆர் குறியீடுகளை நீங்கள் ஸ்கேன் செய்யும்போது, அந்தக் குறியீட்டில் வணிகரின் விவரங்கள் இருக்கும். உங்கள் பேமெண்ட் ஆப் மூலம், நீங்கள் அனுப்பும் பணத்திற்கான இலக்கை அது அடையாளம் காட்டும். நீங்கள் தொகையை உள்ளிட்டு, உங்கள் யுபிஐ (UPI) பின்னைப் பதிவு செய்த பிறகுதான் பணம் அனுப்பப்படும். இது ‘புஷ் பேமென்ட்’ (Push Payment) எனப்படும். அதாவது, உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை ‘தள்ளி’ அனுப்புகிறீர்கள்.

மோசடி நடப்பது எப்படி?

மோசடி செய்பவர்கள் இந்த செயல்முறையைத் தலைகீழாக மாற்றுகிறார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு க்யூஆர் குறியீட்டை அனுப்பி, அதை ஸ்கேன் செய்தால் பணம் ‘கிடைக்கும்’ என்று நம்பவைப்பார்கள். இது ஒரு ரீஃபண்ட், பரிசுத்தொகை அல்லது நீங்கள் விற்கும் பொருளுக்கான பணம் என்று நம்பச் செய்வார்கள்.

நீங்கள் அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது, உங்கள் பேமெண்ட் ஆப் அதை ஒரு பணப் பரிவர்த்தனை கோரிக்கையாக புரிந்துகொள்கிறது. பணம் பெறுவதற்கு பதிலாக, உங்கள் யுபிஐ பின்னைப் பதிவிடுமாறு கேட்கப்படும். பணம் கிடைப்பதாக நினைத்து நீங்கள் பின்னை பதிவிட்டால், உங்கள் கணக்கிலிருந்து பணம் ‘எடுக்கப்பட்டு’ மோசடி செய்பவருக்கு சென்றுவிடும்.

எனவே உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ள, கீழ்க்கண்ட முக்கிய விதிகளை எப்போதும் பின்பற்றுங்கள்.

1. பணத்தை பெறுவதற்காக ஒருபோதும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யாதீர்கள். க்யூஆர் குறியீட்டின் அடிப்படை நோக்கம் பணம் செலுத்துவதுதான், பெறுவது அல்ல.

2. பணம் பெறுவதற்கு பின் எண் தேவையில்லை. யாராவது உங்களுக்கு பணம் அனுப்பினால், உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதற்கு நீங்கள் எந்தவொரு யுபிஐ பின் அல்லது கடவுச்சொல்லை உள்ளிட தேவையில்லை.

3. அவசரப்படுத்தும் தந்திரங்களை கவனியுங்கள். மோசடி செய்பவர்கள், அவசரப்படுத்துவதன் மூலமோ அல்லது உணர்ச்சிபூர்வமாக பேசுவதன் மூலமோ உங்களை யோசிக்காமல் செயல்படத் தூண்டுவார்கள். “இந்த ஆஃபர் சில நிமிடங்கள் மட்டுமே” அல்லது “இப்போது பணம் அனுப்ப வேண்டும்” என்று சொல்வார்கள்.

4. ஆதாரத்தை சரிபார்க்கவும். தெரியாத ஒருவரிடமிருந்து க்யூஆர் குறியீடு வந்தால், அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அந்தச் செயலை தவிர்க்கவும். எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு முன், அதன் விவரங்களையும், அந்த நபரின் அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மேற்கண்ட இந்த விழிப்புணர்வு தகவல்களை நாம் நமக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்வதன் மூலம், குற்றவாளிகளின் வலையில் சிக்குவதை தவிர்க்கலாம். க்யூஆர் குறியீடு ஒரு வசதியான கருவி, ஆனால் அதை சரியாகப் புரிந்துகொண்டு, அதன் நோக்கத்தின்படி பயன்படுத்த வேண்டும்: பணம் செலுத்த, பெறுவதற்கு அல்ல.