தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்து திடீரென ஒரு சறுக்கலை சந்தித்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வங்கியில் பணிபுரிந்து வந்த சூழலில் நடுவே குறும்படங்கள் இயக்கி வந்த லோகேஷ், முதல் படமான மாநகரம் இயக்க தொடங்கியதும் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு நேர இயக்குனராக மாறி விட்டார்.
ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு இளம் நடிகர்கள் இணைந்த மாநகரம் திரைப்படத்தில் ஏராளமான புதுமுகங்கள். ஆனாலும் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை மற்றும் கதை உள்ளிட்ட அம்சங்கள் ரசிகர்களை கவர, முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என தடம் பதித்தார். மாநகரம் படத்தின் வெற்றியால், அடுத்த படத்திலேயே கார்த்தியை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அடுத்தடுத்து பெரிய ஹீரோக்கள்
ஒரே இரவில் நடக்கும் ‘கைதி‘ திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற, அடுத்து விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் என பெரிய ஹீரோக்கள், பெரிய வெற்றி என 4 படங்களிலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தையும் லோகேஷ் பெற்று விட்டார்.
இதன் காரணமாக, விஜய் – லோகேஷ் மீண்டும் இணைந்த லியோ திரைப்படத்தின் மீதும் வானளவு எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், லியோ படம் வெளியான பின்னர் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. இருந்தாலும் வசூலில் விஜயின் திரைப் பயணத்தில் பெரிய வெற்றியாக லியோ பதிவானது.
கூலியில் வாங்கிய அடி
லியோவில் செய்த தவறுகளை அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணையும் படத்தில் லோகேஷ் கனகராஜ் சரி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நாகர்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், சவுபின் சாஹிர் ஆகியோர் இணைந்ததும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த, படமோ மண்ணை கவ்வியது. சினிமா அரிதாக பார்ப்பவர்களே கூலி படத்தில் ஏராளமான குறைகளை கூற, லோகேஷ் மீதும் விமர்சனம் அதிகமானது.

ஏதோ அதிர்ஷ்டத்தால் தான் லோகேஷ் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது என்றும் பலர் பேச தொடங்கினர். இன்னொரு பக்கம், கைதி 2, விக்ரம் 2 என LCU படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு குறைந்து போனது. கூலி படம் தயாரான சமயத்தில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஆமீர் கானுடன் தனது கனவு திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக தகவல் வெளியானது.
ஆனால் கூலி படத்தின் வரவேற்பிற்கு பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமீர் கான் நடிக்கப் போவதில்லை என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதே போல, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சுமார் 40 ஆண்டுகள் கழித்து இணையவுள்ள பிரம்மாண்ட திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கமலுடன் தான் இணைந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்தவர், இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என தெரிவித்து விட்டார். இதனால், லோகேஷ் அந்த படத்தை இயக்கமாட்டார் என்றும் பலர் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். இதற்கிடையே தான் ரஜினி – கமல் இணையும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன.
மீண்டு வருவார்..
என்னதான் கமல்ஹாசன், விஜய், ரஜினிகாந்த் என பலரை லோகேஷ் இயக்கியிருந்தாலும் கூலி படத்தால் ஆமீர்கான் படம், ரஜினி – கமல் படம் என அவரது வாய்ப்பு பறிபோனதாக வரும் தகவல், நிச்சயம் அவருக்கு பின்னடைவு தான். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ், கைதி 2 மூலம் தான் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபிப்பார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

