இந்தியா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படாவிட்டால், உலக அரசியல் போட்டியில் தோல்வியடைவோம் என அமெரிக்காவுக்கு பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் டிரம்பின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை உள்ளடக்கிய தெற்குலக நாடுகளுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து மரியாதைக்குரிய, கூட்டுறவு சார்ந்த வெளியுறவு கொள்கையை கடைப்பிடிக்க தவறினால், உலக அரசியல் போட்டியில் தோல்வியடைவோம் என அலெக்சாண்டர் ஸ்டப் அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் நடந்த மாநாட்டிற்குப் பிறகு, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பனிப்போர் முடிவடைந்த காலகட்டம் முடிந்துவிட்டது என்றும், பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான போரை தொடங்கியதே இந்த மாற்றம் தொடங்கிய தருணம் என்றும் அலெக்சாண்டர் ஸ்டப் குறிப்பிட்டார். இது பலதரப்பு நிறுவனங்கள், விதிகள் மற்றும் நெறிமுறைகளை பலவீனப்படுத்தியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்புக் குழுவில் நடந்த சந்திப்புகள், மேற்குலகிற்கு எதிரான நாடுகளின் புதிய கூட்டணியை காட்டுகின்றன. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஒன்றிணைந்தால் அது உலகின் எதிர்க்க முடியாத, அழிக்க முடியாத ஒரு சக்தியாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா போன்ற தெற்குலக நாடுகளுடன் இணைந்து செயல்படாததற்கான விளைவுகள் குறித்து அலெக்சாண்டர் ஸ்டப் தனது கவலையை வெளிப்படுத்தினார். “என்னுடைய ஐரோப்பிய சகாக்களுக்கு மட்டுமல்ல, குறிப்பாக அமெரிக்காவுக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், இந்தியா போன்ற தெற்குலக நாடுகளுடன் ஒரு கூட்டுறவு மற்றும் கண்ணியமான வெளியுறவு கொள்கையை பின்பற்றவில்லை என்றால், இந்த போட்டியில் நாம் தோல்வியடைவோம்” என்று அவர் எச்சரித்தார்.
இந்தியாவை சாதாரணமாக எடை போட வேண்டாம் என்றும், இந்தியாவும் தற்போது வல்லரசு தான் என்றும், எனவே இந்தியா அனைத்து நாடுகளிடமும் அனுசரித்து நட்புடன் செல்வது போலவே அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் அனுசரித்து போக வேண்டும் என்றும், இந்தியாவை இனி மிரட்டியோ, வரி விதித்து அதிகாரத்தை பயன்படுத்தியோ வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
