தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகளும், குடும்ப உறவுகளும் புதிய பரிமாணங்களை எட்டி வருகின்றன. குறிப்பாக, திமுக அமைச்சரவையில் சக்திவாய்ந்த நபராக் கருதப்படும் எ.வ.வேலு மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு இடையே உருவாகியுள்ள ஒரு ‘சம்பந்தி’ உறவு குறித்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எ.வ.வேலுவின் பேத்தியை, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருச்சி சூர்யா சிவா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேமுதிக தரப்பில் மாநிலங்களவை சீட் மற்றும் கணிசமான தேர்தல் நிதி கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், பிரேமலதா தனது தம்பியின் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இந்த இக்கட்டான சூழலில், எ.வ.வேலு முன்னின்று நடத்திய ‘லாபி’ தான் தேமுதிகவிற்கு அதீத முக்கியத்துவத்தை பெற்றுத் தந்துள்ளது. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட கிடைக்காத முக்கியத்துவம் தேமுதிகவிற்கு வழங்கப்பட்டதன் பின்னணியில், இந்த வருங்கால சம்பந்த உறவே முக்கிய காரணம் எனவும் திருச்சி சூர்யா சிவா கூறியுள்ளார்.
விஜய பிரபாகரன் கடந்த காலங்களில் மேடைகளில் பேசும்போது, தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், மற்றவர்களை எம்.எல்.ஏ ஆக்குவதே தனது பணி என்றும் கூறி வந்தார். ஆனால், தற்போது அவர் திடீரென சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருப்பதன் பின்னணியில் எ.வ.வேலுவின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. எ.வ.வேலுவின் பேத்தியை திருமணம் செய்ய வேண்டுமானால், விஜய பிரபாகரன் ஒரு கௌரவமான பதவியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே, தேர்தலில் நிற்க மாட்டேன் என்று சொன்னவர் இப்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த திருமண வைபவம் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா ஆகிய இருவரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பாதுகாப்பான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எ.வ.வேலு முழு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொள்கை ரீதியான முரண்பாடுகளை தாண்டி, குடும்ப உறவுகள் மூலம் அதிகாரத்தை தக்கவைக்கும் இந்த ‘சம்பந்தி அரசியல்’, திமுகவின் நீண்டகால தொண்டர்களுக்கு ஒரு கசப்பான அனுபவமாகவே இருக்கும். தேர்தலுக்கு பின் தமிழக அரசியலில் திருமண உறவுகள் மூலம் அரங்கேறப்போகும் இந்த மாற்றங்கள், ஆட்சியதிகாரத்தில் யாருடைய கை ஓங்கியிருக்கும் என்பதை தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
