சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்

By Keerthana

Published:

சென்னை: சேலையூரில் கையெழுத்தை போலியாக போட்டு அடுக்குமாடி கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருமான அழகு மீனா போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் அழகு மீனா. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்று சென்று விட்டார். இந்த நிலையில் அழகு மீனா ஐஏஏஸ் , கடந்த வாரம் தாம்பரம் அடுத்த சேலையூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், சென்னை பல்லாவரத்தில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனம் சேலையூர் பகுதியில் புதிதாக கட்டியுள்ள அடுக்குமாடி கட்டிடத்துக்கு எனது கையெழுத்தை போலியாக போட்டு தடையில்லா சான்றிதழ் தயாரித்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்றுள்ளனர். அந்த கட்டுமான நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் இருந்தார்.

புதிதாக கட்டியுள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்இணைப்பு வழங்குவதற்காக அதன் அருகே வசிக்கும் கோபால் என்பவரது வீட்டின் அருகே டிரான்ஸ்பார்மர் பொருத்தியுள்ளார். சந்தேகம் அடைந்த கோபால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்த கட்டிடத்துக்கு எவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டது? என சேலையூர் மின்வாரிய அலுவலகத்தில் கேட்டிருந்தார்.

அதற்கு அவர்கள், தாம்பரம் மாநகராட்சி சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் மின் இணைப்பு வழங்கியதாக தெரிவித்தனர். அதன்பிறகுதான் தனது கையெழுத்தை போலியாக போட்டு தடையில்லா சான்றிதழ் தயாரித்து இருப்பது அழகு மீனா அவர்களின் கவனத்திற்கு தெரியவந்தது. அதன் பின்னர் தான் அவர் போலீசில் புகார் செய்து உள்ளார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.