அப்பல்லோ மருத்துவமனையில் AI மருத்துவ கருவிகள்.. நர்ஸ்கள் வேலைக்கு ஆபத்தா?

AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு பணிகளை மேற்கொள்வதன் காரணமாக, ஏற்கனவே பல வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைகளில் AI மருத்துவ கருவிகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக…

ai hospital
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு பணிகளை மேற்கொள்வதன் காரணமாக, ஏற்கனவே பல வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைகளில் AI மருத்துவ கருவிகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் நர்ஸ்கள் வேலை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ, மருத்துவர்களும் செவிலியர்களும் எதிர்கொள்ளும் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. தினமும் அதிகமான நோயாளிகளை கவனிக்க வேண்டிய மருத்துவர்களும் செவிலியர்களும், இந்த தொழில்நுட்பம் மூலம் சிரமம் குறையக்கூடும். நோயறிதல் துல்லியம் அதிகரிக்கவும், நோயாளிகளின் விவரங்களை பெற்று, அவர்கள் சந்திக்கும் அபாயங்களை கண்காணிக்கவும், AI பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அறுவை சிகிச்சைகளிலும் ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் செலவினத்தில் 3.5% ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டில் அதனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தினமும் 2 முதல் 3 மணி நேரம் மிச்சமாகும் என கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் நிறுவப்படும் AI கருவிகள், நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை பகுப்பாய்வு செய்து நோயறிதல், பரிசோதனை, சிகிச்சை பரிந்துரைகளை வழங்கும். மருத்துவர்களின் குறிப்புகளை விரைவாக எழுதவும், செவிலியர்கள் தினசரி அட்டவணைகளை உருவாக்கவும் உதவுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு, அப்பல்லோ மருத்துவமனை புதிய கிளைகளை திறந்து விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், தொழில்நுட்பத்தின் பயன்பாடு அவசியமாகிறது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், AI பயன்பாடு செவிலியர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய செவிலியர் பணி விலகல் வீதம் 25% ஆக உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இது 30% ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், புதிய செவிலியர்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படாது என்பதும் ஒரு முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது.

அனைத்து துறைகளிலும் AI நுழைந்து மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு சவாலாக இருந்து  வரும் நிலையில், இனிமேல் செவிலியர் பணியிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.