தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் மற்றும் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் அ.தி.மு.க. இடையே ஒரு கூட்டணி உருவாகலாம் என்ற யூகம் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் தனது பிரசார பயணங்களில் ஆளும் கட்சியான தி.மு.க.வை மட்டுமே நேரடியாக விமர்சித்து வருகிறார். ஆனால், அ.தி.மு.க. குறித்தோ, அதன் தலைவரான எடப்பாடி பழனிசாமி குறித்தோ எந்த விமர்சனத்தையும் அவர் முன்வைப்பதில்லை. அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் விஜய்யை பற்றிய கேள்விகளை தவிர்த்து வருகிறார். இந்த இரு தரப்பு மௌனமும், டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஒரு புதிய அரசியல் கூட்டணி ஏற்படக்கூடும் என்ற யூகங்களுக்கு வலு சேர்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஒருவேளை விஜய் மற்றும் அ.தி.மு.க. இடையே கூட்டணி ஏற்பட்டால், பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் அடுத்த முக்கிய கேள்வி. அ.தி.மு.க. பா.ஜ.க.வை விட்டு விலகி, விஜயுய்டன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், பா.ஜ.க. தனியாகவோ அல்லது வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்தோ களமிறங்கக்கூடும். இதனால், தி.மு.க.வுக்கு எதிராக பலமான அணி உருவாகுமா அல்லது வாக்குகள் சிதறுமா என்பது அடுத்தகட்ட விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கும்.
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், முன்னாள் முதல்வராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னைத்தான் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார். அ.தி.மு.க. தொண்டர்களும் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அதே சமயம், விஜய் தனது கட்சிப் பிரசாரங்களில் தன்னை தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாகவும், தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் வெளிப்படையாக பிரகடனப்படுத்தி வருகிறார்.
இந்த இருவருமே தங்கள் முதல்வர் வேட்பாளர் நிலையை விட்டு கொடுக்க மாட்டார்கள். இந்த பிரச்சினையை எப்படித் தீர்க்க போகிறார்கள் என்பது இந்த கூட்டணிக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.
விஜய்யின் அரசியல் வருகை, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் சில புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. விஜய்யின் மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தி.மு.க.விடம் அதிக சட்டமன்ற இடங்களை கோருவதற்கு காங்கிரஸ் முயலலாம். ஒருவேளை தி.மு.க. இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், விஜய்யின் த.வெ.க. அணியுடன் காங்கிரஸ் இணையவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல்கள் முடிந்ததும், டிசம்பர் மாதத்தில் தேசிய கட்சிகளின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல்கள், பா.ஜ.க.வின் திட்டங்கள், விய்யின் அடுத்தகட்ட நகர்வுகள் என பல விஷயங்கள் இன்னும் தெளிவு பெறவில்லை. எனவே, டிசம்பர் மாதத்திற்கு பிறகுதான் தமிழக அரசியல் களத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது தெளிவாக தெரியும். அதுவரை, இந்த யூகங்களும், எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து நிலவும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
