தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை வழக்கில் திருப்பம்.. தாயார் பகீர் புகார்

By Keerthana

Published:

மதுரை: மதுரையில் மைதிலி ராஜலட்சுமி என்பவரின் மகனான பள்ளி மாணவனை, ரூ,2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் தலைமறைவான ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனிடையே மைதிலி ராஜலட்சுமி கொடுத்த பொய்யான புகாரால் தான் மகள் இறந்துவிட்டதாக சூர்யாவின் தாய் புகார் அளித்துள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், மைதிலி ராஜலட்சுமி தம்பதியின் மகன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கமாகும். கடந்த 11-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி ஆகியோரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்தி சென்றுவிட்டதாக புகார்கள் எழுந்தது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து மாணவனை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ,2 கோடி தர வேண்டும் என மிரட்டினார்களாம். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவன், ஆட்டோ டிரைவரை கடத்தியது முன்னாள் காவலர் செந்தில்குமார் (45) என்பதை கண்டுபிடித்தனர். தேனி மாவட்டம் போடியில் தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செந்தில்குமார் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

செந்தில்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்தில் கூட்டாளிகளாக செயல்பட்ட தென்காசியை சேர்ந்த 30 வயதாகும் வீரமணி மற்றும் 36 வயதாகும் காளிராஜ் , 38 வயதாகும் நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஐ ஏ எஸ் அதிகாரியின் மனைவி சூர்யா (35), மதுரையை சேர்ந்த மகாராஜா ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சூர்யா, மகாராஜா ஆகியோரை பிடிக்க 4 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் குஜராத்தில் சூர்யா தங்கியிருந்தபோது, தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, “சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது தாயாரும், மகள் தற்கொலை செய்துள்ளாரா? என்பது பற்றி உறுதி செய்வதற்கு போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். ஐ ஏ எஸ் கணவரை பிரிந்தது, பெற்றோருக்கு எதிராக செயல்பட்டது, கடத்தல் வழக்கில் சிக்கிய விரக்தி உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது” என்றார்கள்,

இதனிடையே மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் சூர்யாவின் தாயார் உமா, அளித்துள்ள புகாரில் “குஜராத் போலீசில் இருந்து பேசினார்கள். அப்போது அவர்கள், குஜராத் மாநிலம் ஆமதாபாத் காந்திநகர் பகுதியில் கலெக்டர் பங்களாவில் என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருக்கிறார்கள். என் மகள் சூர்யா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துள்ளார். இதற்கு மைதிலி ராஜலட்சுமி உள்பட 2 பேர்தான் காரணம்.

அவர்கள், என் மகளின் உடைமைகளையும், பணம், சொத்துகளையும் மோசடி செய்தது மட்டுமின்றி, பொய் புகாரும் அளித்து மகளை அசிங்கப்படுத்தி விட்டார்கள். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவர்கள் 2 பேரின் சதி வேலையே காரணம். எனவே பொய் புகார் அளித்த அவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.