ஒரு நாடு செழிக்க வேண்டுமானால் பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டும். அதுபோல ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் அவனது நிதிநிலை அசைக்க முடியாத கோட்டையாக இருக்க வேண்டும். இதை எப்படி கட்டுவதுன்னு பிரபல தத்துவ ஞானி சாணக்கியர் சொல்லக் கேட்போமா…
சாணக்கியரின் முதல் பாடம் ஒரு மனிதனின் செல்வம் அவனது ஒழுக்கத்தைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாதவனிடம் சேரும் செல்வம் ஓட்டைப் பானையில் ஊற்றப்படும் நீரைப் போன்றது. அது எப்போது கசியும்? எப்போது தீரும் என்று தெரியாது. அதனால் முதலில் உங்கள் குணங்களை சீரமைக்க வேண்டும். பேராசை, சோம்பேறித்தனம் மற்றும் தேவையற்ற ஆடம்பரம் ஆகிய மூன்றும் செல்வத்தின் மிகப்பெரிய எதிரிகள்.
ஒரு முதலீட்டாளர் முதலில் தன் மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பார்த்துப் பயப்படாமலும், திடீர் லாபத்தைப் பார்த்துத் தலைகனம் கொள்ளாமல் இருப்பவனே உண்மையான சாணக்கியன்.
வருமானத்தை எப்படி பெருக்குவது என்ற ரகசியத்தையும் சாணக்கியர் சொல்கிறார். பல ஆறுகள் கடலில் வந்து சேருவதைப் போல ஒரு மனிதனின் வருமானம் பல வழிகளில் இருந்தும் வர வேண்டும். ஒரு வழி அடைபட்டாலும் மற்ற வழிகள் அவனைக் காப்பாற்ற வேண்டும். நீங்கள் ஒரு வேலையில் இருந்தால் அது ஒரு வருமானம் மட்டுமே. அதை முதலீடு செய்து அதன் மூலம் வட்டி, வாடகை அல்லது லாபம் என பல கிளை வருமானங்களை உருவாக்க வேண்டும்.
இதைத் தான் நாம் பலதரப்பட்ட வருமான வழிகள் என்கிறோம். உங்கள் உழைப்பு ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் உங்கள் பணம் பல திசைகளில் ஓடி உங்களுக்காகப் பலன்களை அள்ளிக் கொண்டு வர வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



