தனியார் கேப் சர்வீஸ் நிறுவனங்களான உபேர் மற்றும் ஓலா, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணங்கள் பெறுவதாகவும், குறிப்பாக பீக் அவர் மற்றும் இரவு நேரங்களில் அநியாய கட்டணங்களை வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அந்த நிலையில், மத்திய அரசு கூட்டுறவு சங்கத்தின் மூலம் கேப் சர்வீஸ் ஆரம்பிக்க உள்ளதாகவும், இது கேப் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உபேர், ஓலா ஆகியவைகளின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் Sahkar se Samruddhi என்ற பெயரில் ஒரு கேப் சர்வீஸ் மத்திய அரசு தொடங்க இருப்பதாகவும், இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்த கூட்டுறவு சேவை, ஓட்டுநர்களையும் பயணிகளையும் எளிதாக இணைக்கும் என்றும், முதலாளிகள் இல்லாததால் ஓட்டுநர்களின் வருமானம் அதிகரிக்கும் என்றும், பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு இந்த சேவையை ஆரம்பித்தால், இது உலக அளவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட கூட்டுறவு கேப் சர்வீஸ் ஆகும். இந்திய கூட்டுறவுத்துறையில் இது மிகப்பெரிய வெற்றி எனவும் கருதப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் வெற்றி பெற்று, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களிடம் வரவேற்பு பெற்றால், தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவையை கட்டாயம் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இது எந்தளவு சாத்தியம்? மத்திய அரசின் இந்த கேப் சர்வீசுக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.