கணிதத்தில் பட்டமும் மொபைல் போன் ரிப்பேர் சான்றிதழும் பெற்ற ஒருவரிடம் 52 மொபைல் போன்கள் இருந்ததை வைத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் என்பவர் கணிதத்தில் பட்டம் பெற்றதோடு, மொபைல் போன்களை பழுது பார்க்கும் பயிற்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில், அவர் டெல்லியில் உள்ள முக்கிய சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரின் நடத்தை சந்தேகமாக இருப்பதை போலீசார் கவனித்தனர்.
அதைத் தொடர்ந்து, போலீசார் அவரை நிற்கச் சொன்னனர். ஆனால் அவர் நிற்காமல் ஓடிவிட்டதால், காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்தனர். அவரிடம் சோதனை மேற்கொண்டபோது, 52 மொபைல் போன்களும் 15 மதர் போர்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மொபைல் போன்கள் அனைத்தையும் அவர் திருடியதாகவும், டெல்லியில் திருடிய போன்களை ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் விற்பனை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
கணிதத்தில் கஷ்டப்பட்டு பட்டம் பெற்று, மொபைல் போன் ரிப்பேர் பயிற்சி பெற்றும் சரியான வருமானம் இல்லாததால், சீக்கிரமாக பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மொபைல் போன்களை திருடி, அவற்றை விற்பனை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரின் தந்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தை நடத்தி வருகிறார். தனது குடும்பத்தை பணக்காரமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த குற்றத்தை செய்ததாக பிரமோத்குமார் கூறியுள்ளார்.
திருட்டு தொழில் செய்து பணக்காரராக வாழ நினைத்த இளைஞர் தற்போது வாழ்க்கையை தொலைத்து விட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு வருகிறார்.